கூவிக்கூவி அழைத்த இளைஞர்; இணையத்தில் டிரெண்டிங் ஆனது கூமாப்பட்டி!

விருதுநகர்: இன்ஸ்டாகிராமை அலறவிட்டு வரும் கூமாப்பட்டி என்ற கிராமத்தை தனது பாணியில் பேசி பேசி, தேசிய அளவில் டிரெண்டாக்கியுள்ளார் இளைஞர் ஒருவர்.
தற்போது இன்ஸ்டாகிராமை திறந்தாலே கூமாப்பட்டி என்ற பெயர் தான் டிரெண்டாகி வருகிறது. சமூக வலைதளங்களில் ஒரு பொருளை விளம்பரம் செய்ய லட்சக்கணக்கில் செலவு செய்பவர்களுக்கு மத்தியில், ஒற்றை ரூபாய் செலவில்லாமல் கூமாப்பட்டி கிராமத்தை இந்திய அளவில் புகழ் பெறச் செய்துவிட்டார் இளைஞர் ஒருவர்.
அந்த இளைஞரின் வீடியோக்களில், "ஏங்கே.... யாருக்கேனும் மன அழுத்தம் இருந்தாலும் சரி, மன உளைச்சல் இருந்தாலும் சரி அதை சரி பண்ண இந்த கூமாபட்டிக்கு வாங்க, இந்த கூமாப்பட்டி ஒரு தனி தீவு, இது ஒரு ஐஸ்லாண்டு," என்று அந்த இளைஞர் கூவி கூவி அழைக்கிறார். மேலும், அந்த கிராமத்தில் உள்ள பச்சை, பசும் இயற்கை சூழலையும் காட்டியுள்ளார். அணை நீரில் குளித்தபடி இந்த வீடியோவை பதிவு செய்து வெளியிட்டுள்ளார்.
மற்றொரு வீடியோவில், "இது சொர்க்க பூமிங்க.. அழகிய தீவுங்க....எங்க ஊரு தண்ணீர் சர்பத் மாதிரி இருக்குங்க... ஏங்கே..." என அந்த இளைஞர் கொடுத்த ஹைப்பால், அப்படி என்ன தான் கூமாபட்டியில் இருக்கிறது என்று பலரும் எதிர்பார்ப்பை எகிறச் செய்துள்ளது. அதேவேளையில், கூமாப்பட்டிக்கு அவெஞ்சர்ஸ் படத்தின் சூப்பர் ஹீரோ தோர் (thor) கூமாப்பட்டிக்கு வந்தது போன்ற ஏ.ஐ., வீடியோவும் பரவி வருகின்றன.
இதனால், கூமாப்பட்டி தேசிய அளவில் பேமஸ் ஆகிவிட்டது. மேலும், இந்த கூமாப்பட்டி எங்கு இருக்கிறது? அங்கு என்ன சிறப்புகள் இருக்கின்றன? என்று நெட்டிசன்களும் இணையதளங்களில் சல்லடை போட்டு தேட ஆரம்பித்து விட்டனர். அதிலும், சில இன்ஸ்டா பிரபலங்கள், கூமாப்பட்டிக்கே சென்று, தங்கள் பங்கிற்கு வீடியோக்களை எடுத்து ரீல்ஸ் போட்டு வருகின்றனர். ஊட்டி, கொடைக்கானல் உள்ளிட்ட சுற்றுலா தளங்களோடு தற்போது கூமாப்பட்டியும் இணைந்து விட்டதாக சொல்லப்படுகிறது.
சரி, கூமாப்பட்டி எங்கு இருக்கிறது என்பதை பார்ப்போம்.
விருதுநகர் மாவட்டத்தில் வத்திராயிருப்பு என்ற ஊருக்கு அருகில் மேற்குத் தொடர்ச்சி மலை அடி வாரத்தில்தான் இந்த கூமாப்பட்டி கிராமம் அமைந்துள்ளது. இன்னும் சொல்லப்போனால், ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோவிலில் இருந்து 20 கி.மீ., தொலைவில் இந்த கிராமம் அமைந்துள்ளது. பிளவக்கல் பெரியார் அணை மற்றும் கோயிலாறு அணையுடன் மலையடிவராத்தில் இருப்பதால் கூமாப்பட்டியின் அழகை வர்ணிக்க வார்த்தைகளே இல்லை என்று சொல்லலாம். முழுக்க முழுக்க விவசாயத்தை மட்டுமே பிரதான தொழிலாக கொண்டுள்ளது.
ஆனால், இந்த வீடியோ பழையது என்றும், தற்போது கூமாப்பட்டியில் ஆறுகள் வறண்டு காணப்படுவதாகவும் அங்குள்ள மக்கள் சிலரால் கூறப்படுகிறது. மேலும், சிறிய கிராமமான கூமாப்பட்டியில் சுற்றுலா வசதிகள் ஏதும் இல்லை என்றும், சுற்றுலா பயணிகள் நம்பி வந்து ஏமாற வேண்டாம் என்று பொதுப்பணித்துறையினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.
இதனிடையே, அணையில் குளிக்கவோ, மீன் பிடிக்கவோ யாருக்கும் அனுமதி இல்லாத நிலையில், இந்த வீடியோவில் வைரலாகி வரும் நபர், தடை செய்யப்பட்ட பகுதியில் குளித்து ரீல்ஸ் எடுத்து போட்டுள்ளாரா? என்று அதிகாரிகள் விசாரணையை தொடங்கியுள்ளனர்.


மேலும்
-
நடிகர் கிருஷ்ணாவை கைது செய்தது ஏன்: போலீசார் விளக்கம்
-
என்னைக் கொஞ்சம் தூங்க வைத்தால் வணங்குவேன் தாயே!
-
வெளிப்படையான பொது மாறுதல் கலந்தாய்வு: தமிழக அரசுக்கு அன்புமணி வலியுறுத்தல்
-
அங்கீகரிக்கப்படாத 345 அரசியல் கட்சிகள் : பதிவு நீக்க தேர்தல் ஆணையம் நடவடிக்கை
-
ரூ. 500 லஞ்சம்: மின்வாரிய வணிக உதவியாளர் கைது
-
ஜம்முவில் திடீர் வெள்ளம் : 3 பேர் உயிரிழப்பு, 4 பேர் மீட்பு