உத்திரமேரூர் இரட்டை தாளீஸ்வரர் கோவிலில் லட்ச தீப திருவிழா

உத்திரமேரூர்:உத்திரமேரூர் இரட்டைதாளீஸ்வரர் கோவிலில் 8ம் ஆண்டு வருடாபிஷேக விழா மற்றும் லட்ச தீப விழா நடந்தது.

உத்திரமேரூரில், மனோன்மணி அம்பாள் சமேத இரட்டை தாலீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு உள்ளூர் மற்றும் வெளியூர்களில் இருந்து தினமும் 1,000க்கும் மேற்பட்ட பக்தர்கள் வந்து செல்கின்றனர்.

இந்த கோவிலில் சிவராத்திரி, பிரதோஷம், பௌர்ணமி ஆகிய நாட்களில் சிறப்பு வழிபாடு நடக்கும். நேற்று காலை 8:00 மணிக்கு விக்னேஷ்வர பூஜையுடன் லட்ச தீப விழா துவங்கியது. 9:00 மணிக்கு கலச பூஜையும், 108 சங்கு ஹோமமும் நடந்தது.

காலை 10:00 மணிக்கு வருடாபிஷேகம், மூலவருக்கு அபிஷேகம், 108 சங்கு அபிஷேகம் ஆகியவை நடந்தது. பின், 11:00 மணிக்கு தீபாராதனை நடந்தது. இதையடுத்து, மாலை 6:00 மணிக்கு லட்ச தீப விழா நடந்தது. அதில், பக்தர்கள் கோவில் வளாகம் முழுதும் அகல் விளக்கில் தீபம் ஏற்றி வழிபட்டனர்.

Advertisement