சீறும் இயற்கை; சிதறும் மக்கள்! 3 மாவட்டங்களுக்கு 'ரெட் அலெர்ட்'

திருவனந்தபுரம்: கேரளாவில், எர்ணாகுளம், இடுக்கி, திருச்சூர், கண்ணூர், காசர்கோடு, கோழிக்கோடு, வயநாடு, பத்தினம்திட்டா, மலப்புரம், உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை கொட்டி வருகிறது. பலத்த காற்றுடன் மழை பெய்வதால், பல இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்தன. மின்கம்பங்களும் விழுந்ததால் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது.

கனமழையால் ஆறுகளின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்துள்ளது. எர்ணாகுளத்தில் உள்ள மூவாட்டுப்புழா ஆறு, திருச்சூர் மற்றும் மலப்புரம் வழியாக பாயும் பாரதப்புழா ஆறு, பத்தனம்திட்டாவில் அச்சன்கோவில் மற்றும் பம்பா ஆறுகள், கோட்டயத்தில் மணிமாலா, இடுக்கியில் தொடுபுழா ஆறு மற்றும் வயநாட்டில் கபானி உள்ளிட்ட பல ஆறுகளில் அபாய கட்டத்தை தாண்டி வெள்ளம் பாய்கிறது.

வயநாடு, முண்டக்கை - -சூரல்மாலா பகுதியில் தொடர்ந்து பெய்த மழையால் சூரல்மாலா ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இதனால், பெய்லி பாலத்தின் அருகே கரைகளில் அரிப்பு ஏற்பட்டது. கடந்த ஆண்டு இதேபகுதியில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில், 200க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர். ஏராளமான வீடுகள் அடித்துச் செல்லப்பட்டன.

மேலும் எர்ணாகுளம், திருச்சூர் மற்றும் இடுக்கி, மலப்புரம் மற்றும் வயநாடு மாவட்டங்களில் தாழ்வான பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த மாவட்டங்களுக்கு இந்திய வானிலை மையம் நேற்று, அதி கனமழைக்கான, 'ரெட் அலெர்ட்' எச்சரிக்கை விடுத்தது. இதனால், நுாற்றுக்கணக்கான மக்கள் நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டனர்.

திருச்சூர், கண்ணூர், காசர்கோடு, கோழிக்கோடு உள்ளிட்ட ஏழு மாவட்டங்களுக்கு, 'ஆரஞ்ச்' எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

ஹிமாச்சலப் பிரதேசத்தின் காங்க்ரா மாவட்டத்தில் ஏற்பட்ட மேகவெடிப்பால் கனமழை கொட்டியது. திடீர் வெள்ளத்தில், தர்மசாலாவின் கானியாரா அருகே உள்ள இந்திரா பிரியதர்ஷினி நீர்மின் திட்டத் தொழிலாளர்கள் 20 பேர் அடித்துச் செல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. ஏற்கனவே இரண்டு பேரின் உடல்கள் மீட்கப்பட்ட நிலையில், மேலும் இரண்டு உடல்களை மீட்புப்படையினர் நேற்று மீட்டனர். இதனால் பலி எண்ணிக்கை நான்காக உயர்ந்துள்ளது.

மழை காரணமாக நீர்மின் திட்டத்தின் பணிகள் நிறுத்தப்பட்டதால், கிட்டத்தட்ட 280 தொழிலாளர்கள் மனுனி காட் என்ற பகுதியில் தற்காலிக தங்குமிடங்களில் ஓய்வெடுத்து கொண்டிருந்தனர். அப்போது, திடீரென வெள்ளம் பாய்ந்த நிலையில், 20 பேர் அடித்துச் செல்லப்பட்டதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதேபோன்று குல்லு மாவட்டத்தில் ஏற்பட்ட மேகவெடிப்புகளால் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. வீடுகள், பாலம், கடைகள் மற்றும் சாலைகளின் சில பகுதிகள் அடித்துச் செல்லப்பட்டன. வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட 14 வயது சிறுவன் உட்பட மூன்று பேரின் உடல்கள் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.

ஜம்முவில் மேகவெடிப்பு; மூவர் பலி

20 பேர் மாயம்



ஜம்மு: காஷ்மீரின் ரஜோரி, பூஞ்ச், தோடா மற்றும் கதுவா மாவட்டங்களில், நேற்று திடீரென மேகவெடிப்பு ஏற்பட்டது. பல்வேறு பகுதிகளில் கனமழை கொட்டியது. இதனால் காட்டாற்று வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

மேகவெடிப்பால், ரஜோரி மாவட்டத்தில், சியால்சுய் மவு கிராமத்தில் உள்ள ஆற்றில் திடீர் வெள்ளம் பாய்ந்தது. அப்போது, அந்த பகுதியில் கால்நடைகளை மேய்த்துக் கொண்டிருந்த மூன்று சிறுவர்கள் அடித்துச் செல்லப்பட்டனர்.

ஷகாபத் அலி, 14, சபீனா கவுசர், 11, ஆகியோர் நீரில் மூழ்கி இறந்தனர். சைமா, 10, என்ற சிறுவனை உள்ளூர்வாசிகள் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.

தோடாவில் உள்ள லோபா ஓடையில் குளித்துக்கொண்டிருந்த ஒருவரும், திடீர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்தார். அவரது உடலை, மாநில பேரிடர் மீட்புப் படையினர் மீட்டனர்.

கதுவா மாவட்டத்தில் உஜ் நதியிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

அதில் மீன்பிடிக்கச் சென்ற இருவர் நீரில் இழுத்துச் செல்லப்பட்ட நிலையில், அவர்களும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

பூஞ்ச், காசி மோரா, தோடா, உதம்பூர் மற்றும் ராம்பன் உள்ளிட்ட இடங்களில் உயரமான பகுதிகளில் மேகவெடிப்பு காரணமாக திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால், உயிரிழப்பு ஏற்பட்டதாக எந்த தகவலும் இல்லை.

இதனிடையே, ரஜோரி மற்றும் தோடா உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில், ஆறுகள், நீர்வீழ்ச்சிகளுக்கு அருகில் செல்லவோ, குளிக்கவோ, மீன்பிடிக்கவோ கூடாதென முழுமையான தடை விதிக்கப்பட்டுள்ளது.

20 பேர் மாயம்

Advertisement