நெல்லை எம்.பி.,க்கு எதிரான வழக்கில் நாகேந்திரன் சாட்சியம்

சென்னை: திருநெல்வேலி தொகுதி காங்கிரஸ் எம்.பி., ராபர்ட் புரூசுக்கு எதிராக தொடர்ந்த தேர்தல் வழக்கில், தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன், சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆஜராகி சாட்சியம் அளித்தார்.

கடந்த 2024ல் நடந்த லோக்சபா தேர்தலில், திருநெல்வேலி தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட ராபர்ட் புரூஸ், 1.65 லட்சம் ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

அவரது வெற்றியை எதிர்த்து, பா.ஜ., வேட்பாளர் நயினார் நாகேந்திரன், சென்னை உயர் நீதிமன்றத்தில், தேர்தல் வழக்கு தாக்கல் செய்தார். ராபர்ட் புரூஸ் தன் வேட்புமனுவில், சொத்து விபரங்களையும், வழக்கு விபரங்களையும் மறைத்துள்ளதாக கூறியிருந்தார்.

இந்த வழக்கில், ராபர்ட் புரூஸ் ஏற்கனவே ஆஜராகி, சொத்துகள் குறித்த ஆவணங்களை பதிவு செய்தார்.

இந்த வழக்கு, நீதிபதி ஜெயச்சந்திரன் முன், நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் ஆஜராகி சாட்சியம் அளித்தார். அவரிடம் ராபர்ட் புரூஸ் தரப்பு வழக்கறிஞர் குறுக்கு விசாரணை நடத்தினார்.

குறுக்கு விசாரணை முடிவடையாததால், வழக்கு விசாரணையை ஜூலை 2ம் தேதிக்கு தள்ளிவைத்த நீதிபதி, அன்றைய தினமும் நயினார் நாகேந்திரன் ஆஜராக உத்தரவிட்டார்.

Advertisement