அரசின் கவனம் பெற்ற கூமாப்பட்டி... ரூ.10 கோடிக்கு விளக்கம் சொன்னது விருதுநகர் மாவட்ட நிர்வாகம்!

6


விருதுநகர்: இன்ஸ்டாகிராமில் டிரெண்டிங்கில் இருக்கும் கூமாப்பட்டியின் பிளவுக்கல் பெரியாறு அணையில் மேற்கொள்ளப்பட இருக்கும் பணிகள் குறித்த தகவலை விருதுநகர் மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ளது.


தற்போது 'இன்ஸ்டாகிராம்' சமூக வலைதளத்தில் கூமாப்பட்டி என்ற பெயர் டிரெண்டாகி வருகிறது. அந்த கிராமத்தைச் இளைஞர் ஒருவர், அணையில் குளித்தபடி, இயற்கை சூழலையும் காட்டியபடி தனது பாணியில் பேசியவாறு வீடியோ ஒன்றை வெளியிட, அது வைரலாக துவங்கியது.இதனை பார்த்த சிலர் அந்த கிராமத்திற்கு படையெடுக்க துவங்கி விட்டனர். இன்னும் பலர், கூமாபட்டி குறித்து வீடியோ வெளியிட துவங்கி உள்ளனர்.

விருதுநகர் மாவட்டத்தில் வத்திராயிருப்பு என்ற ஊருக்கு அருகில் மேற்குத் தொடர்ச்சி மலை அடி வாரத்தில்தான் இந்த கூமாப்பட்டி கிராமம் அமைந்துள்ளது. இதன் அருகில் தான் பிளவக்கல் பெரியார் அணை மற்றும் கோயிலாறு அணைகள் உள்ளன. தற்போது இங்கு சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி இல்லை. கூமாப்பட்டி டிரெண்டாக தொடங்கியுள்ள நிலையில், இந்த அணைகளுக்கு சுற்றுலாப் பயணிகளை அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.


இந்த நிலையில், பிளவுக்கல் பெரியாறு அணையில் மேற்கொள்ளப்பட இருக்கும் பணிகள் குறித்த தகவலை விருதுநகர் மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ளது.

இது குறித்து வெளியிடப்பட்ட அறிக்கையில்; விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு வட்டம், பிளவுக்கல் பெரியாறு அணையில் ரூபாய்.10.00 கோடி மதிப்பீட்டில் பூங்கா மேம்பாட்டு பணி நடைபெறும் என்ற முதல்வரின் அறிவிப்பை தொடர்ந்து, அதற்கான திட்ட மதிப்பீடு தயார் செய்து, அரசிடம் நிர்வாக ஒப்புதல் பெறுவதற்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசிடமிருந்து அரசாணை மற்றும் நிதி ஒதுக்கீடு பெறுவதற்கு தொடர்ச்சியாக முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நிதி பெறப்பட்டவுடன் பூங்கா மேம்பாட்டு பணிகள் தொடங்கப்படும், இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.



வைரல் வீடியோவில் பேசிய இளைஞர், சில ஆண்டுக்கு முன் கூமாபட்டியில் 10 கோடி ரூபாயில் மேம்பாட்டு பணி நடக்கும் என்று அறிவித்ததாகவும், ஆனால் எதுவுமே நடக்கவில்லை என்றும் புகார் கூறியிருந்தார். அதற்கு விளக்கம் அளிக்கும் வகையில் மாவட்ட நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

Advertisement