2027ம் ஆண்டிற்குள் மீதமுள்ள எஸ்-400 ஏவுகணை தடுப்பு அமைப்புகள் வழங்கப்படும்; உறுதி செய்தது ரஷ்யா

1

புதுடில்லி: வரும் 2027ம் ஆண்டிற்குள், மீதமுள்ள இரண்டு எஸ்-400 ஏவுகணை தடுப்பு அமைப்புகள் இந்தியாவுக்கு வழங்கப்படும் என ரஷ்யா தெரிவித்துள்ளது.



ரஷ்யா வடிவமைத்துள்ள எஸ்-400 அதிநவீன வான் பாதுகாப்பு கவச வாகனம், இந்தியாவில் சுதர்சன சக்கரம் என்று அழைக்கப்படுகிறது. இந்த வாகனம் 600 கி.மீ., தொலைவில் இருந்து வரும் ஏவுகணைகளையும் கண்காணிக்கும். அதேபோல் 400 கி.மீ., தொலைவில் உள்ள இலக்குகளை இடைமறித்து அழிக்கவும் முடியும்.


உலக நாடுகள் வைத்துள்ள வான் பாதுகாப்பு அமைப்புகளில் மிகவும் துல்லியமாக செயல்படக்கூடியது இந்த எஸ் 400 அமைப்பு. இதன் செயல்பாடுகளை ஆராய்ந்த இந்திய ராணுவம் 2018ம் ஆண்டில், ஐந்து எண்ணிக்கையில் எஸ் 400 வான் பாதுகாப்பு அமைப்புகளை வாங்க ஒப்பந்தம் செய்து கொண்டது.


இதன் மொத்த மதிப்பு 40 ஆயிரம் கோடி ரூபாய். முழுத் தொகையையும் இந்தியா செலுத்தி விட்டது. ஆனால் இதுவரை ரஷ்யா 3 எண்ணிக்கையில் மட்டுமே எஸ் 400 வான் பாதுகாப்பு அமைப்புகளை வழங்கியுள்ளது. உக்ரைன் நாட்டுடன் போர் நடந்து வருவதால் ரஷ்யாவால் பாக்கியுள்ள இரண்டு வான் பாதுகாப்பு அமைப்புகளையும் வழங்க முடியவில்லை.


சிந்தூர் நடவடிக்கையின் போது எஸ்-400 வான் பாதுகாப்பு ஏவுகணை அமைப்பை வெற்றிகரமாகப் பயன்படுத்தியதைத் தொடர்ந்து, மீதமுள்ள இரண்டு அமைப்புகளையும் வழங்கும்படி இந்திய ரஷ்யாவுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது. இது தொடர்பாக, சீனா தலைமையில் நடந்த பன்னாட்டு ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க சென்ற, ராஜ்நாத் சிங் ரஷ்யா அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி உள்ளார்.


2027ம் ஆண்டிற்குள் மீதமுள்ள எஸ்-400 ஏவுகணை தடுப்பு அமைப்புகள் இந்தியாவுக்கு வழங்கப்பட்டு விடும் என ரஷ்யா உறுதியாக தெரிவித்துள்ளது.

Advertisement