தி.மு.க.,வுக்கு அழுத்தம் கொடுக்க ரேஷன் ஊழியர்கள் கடிதம்

சென்னை:தி.மு.க., அரசுக்கு அழுத்தம் கொடுக்குமாறு, த.வெ.க., தலைவர் விஜய் உட்பட அனைத்து அரசியல் கட்சிகளுக்கும், ரேஷன் ஊழியர்கள் கடிதம் அனுப்பியுள்ளனர்.

இதுகுறித்து, அரசு ரேஷன் கடை பணியாளர்கள் சங்க மாநில பொதுச்செயலர் தினேஷ்குமார் கூறியதாவது:

கூட்டுறவு, உணவு என, இரு துறை அமைச்சர்களின் கட்டுப்பாட்டில் ரேஷன் கடைகள் உள்ளன. மொத்தம் உள்ள 37,000 கடைகளில், 1,500ஐ உணவுத் துறை நடத்துகிறது. மீதி, கடைகளை கூட்டுறவு துறை நடத்துகிறது. இதனால் ஊதிய முரண்பாடு உள்ளது.

கடந்த 2021 சட்டசபை தேர்தலின்போது, பல்வேறு துறைகளின் கீழ் செயல்படும் ரேஷன் கடைகள், ஒரே துறையின் கீழ் கொண்டு வரப்படும் என, தி.மு.க., வாக்குறுதி அளித்தது. இதுதொடர்பாக அரசு அதிகாரிகளிடம் கடிதங்கள் கொடுத்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை.

எனவே, தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற, தி.மு.க.,வுக்கு அழுத்தம் தர காங்கிரஸ், மார்க்சிஸ்ட், அ.தி.மு.க., - வி.சி., - த.வெ.க., - பா.ம.க., என, 14 முக்கிய அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கும் கடிதம் அனுப்பப்பட்டு உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement