தொடர்ந்து 2 முறை தி.மு.க., வென்றதாக சரித்திரம் இல்லை: நயினார் நாகேந்திரன் பேட்டி

17

திருநெல்வேலி: தொடர்ந்து 2 முறை தி.மு.க., வென்றதாக சரித்திரம் இல்லை என தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

திருநெல்வேலியில் நிருபர்களிடம் நயினார் நாகேந்திரன் கூறியதாவது: முருக பக்தர் மாநாட்டை அரசியல் ஆக்கவில்லை. இது முழுக்க முழுக்க ஒரு பக்தர் மாநாடுதான். நாங்கள் யாரையும் தவறான இடத்திற்குக் கொண்டு செல்லவோ, குறை சொல்லவோ இல்லை. பிற மதங்களையோ, யாரையும் புண்படுத்திப் பேசவில்லை. இந்த மாநாட்டில் எங்களுக்கு ஓட்டுப் போடுங்கள் என்று கேட்கவும் இல்லை.


ஹிந்து முன்னணி நடத்திய மாநாட்டில் நாங்கள் கலந்து கொண்டோம். இதைத் தேர்தல் பயன்பாட்டிற்காகவோ, மக்களைக் குழப்புவதற்காகவோ, ஓட்டு வங்கியாக மாற்றவோ நாங்கள் முயற்சிக்கவில்லை. 1989ல் எம்.ஜி.ஆருடைய மறைவுக்குப் பின்னால் ஒரு இரண்டு வருஷம் தி.மு.க., ஆட்சியில் இருந்தார்கள். 1991ல் ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தார்கள்.


அப்புறம் 1996ல் தி.மு.க.,வினர் ஆட்சிக்கு வந்தார்கள். தொடர்ந்து அவங்க ஆட்சியில் இல்லை. எங்களுடைய கூட்டணி முறையாக அமைந்திருந்தால் இன்று அவர்கள் ஆட்சிக்கு வந்திருக்க மாட்டார்கள். தொடர்ந்து 2 முறை தி.மு.க., வென்றதாக சரித்திரம் இல்லை. வரலாறு மாறப்போவதில்லை. அதனால் அவர்கள் சொல்வதை மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.


தமிழகத்தில் கூட்டணி ஆட்சி விவகாரம் குறித்து அமித்ஷாவும், இ.பி.எஸ்.,யும் பேசி முடிவெடுப்பார்கள். திருச்செந்தூர் கோவில் கும்பாபிஷேகத்தை ஓட்டு வங்கியாக பயன்படுத்த தி.மு.க., முயற்சி செய்கிறது. தமிழகத்தில் அவர்களுக்கு (தி.மு.க.,) தேர்தல் பயம், தோல்வி பயம் வந்துவிட்டது. இவ்வாறு நயினார் நாகேந்திரன் கூறினார்.

Advertisement