சிவசேனா எம்.பி.,யின் டிரைவருக்கு ரூ.150 கோடி நிலம் தானமாக கிடைத்தது எப்படி: துருவுகிறது போலீஸ்!

மும்பை: சிவசேனா எம்.பி., சந்தீபன்ராவ் பூம்ரேவின் டிரைவருக்கு ரூ.150 கோடி நிலம் தானமாக கிடைத்தது குறித்து போலீசார் பல்வேறு கோணத்தில் துருவி துருவி விசாரணை நடத்தி வருகின்றனர்.
மஹாராஷ்டிரா மாநிலம், அவுரங்கபாத் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சந்தீபன்ராவ் பும்ரே. சிவசேனா கட்சியில் எம்.பி., ஆக இருக்கிறார். தொடர்ச்சியாக 5 முறை எம்.எல்.ஏ.,வாக தேர்வு செய்யப்பட்டவர். இவரது மகன் விலாஸ் பும்ரே தற்போது எம்.எல்.ஏ.,வாக இருக்கிறார். இவர்களது டிரைவர் ஜாவேத் ரசூல் ஷேக். இவர் 13 ஆண்டுகளாக எம்.பி., சந்தீபன்ராவ் பும்ரே மற்றும் அவரது எம்.எல்.ஏ., மகன் ஆகியோருக்கு டிரைவராக பணி செய்து வருகிறார்.
இந்நிலையில், டிரைவராக பணிபுரியும் ஜாவேத் ரசூல் ஷேக்கிற்கு, ஹைதராபாத்தின் முன்னாள் திவான் சலார் ஜங் குடும்பத்திடம் இருந்து, மஹாராஷ்டிராவில் ரூ.150 கோடி மதிப்புள்ள நிலம் தானமாக கிடைத்து உள்ளது. இது குறித்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில் பொருளாதார குற்றப் பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நல்ல உறவு
இது குறித்து, டிரைவர் ஜாவேத் கூறியதாவது: விசாரணைக்கு ஒத்துழைத்து வருகிறேன். குற்றப்பிரிவு போலீசார் கேட்ட ஆவணங்களை ஏற்கனவே சமர்ப்பித்து உள்ளேன். சலார் ஜங் குடும்பத்தின் சந்ததியினருடன் எனக்கு நல்ல உறவுகள் உள்ளன, எனவே அவர்கள் எனக்கு நிலத்தை பரிசாக அளித்தனர், என்றார்.
சம்பாஜிநகரில் உள்ள ஜல்னா சாலையில் உள்ள தாவூத்புராவில் பிரதான நிலம் ஜாவேத்தின் பெயரில் இருப்பதாகக் கூறி, பர்பானியைச் சேர்ந்த ஒரு வழக்கறிஞர் அளித்த புகாரின் அடிப்படையில், ஜாவேத்துக்கு சம்மன் அனுப்பி, விசாரணை நடத்தினோம் என போலீஸ் கமிஷனர் பிரவீன் பவார் தெரிவித்தார்.
சலார் ஜங் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் ஏன் தனது பெயரில் மூன்று ஏக்கர் நிலத்தை ஒரு சிறந்த இடத்தில் நன்கொடையாக வழங்குகிறார் என்பதை அவர் விளக்க வேண்டும் என இன்ஸ்பெக்டர் சாம்பாஜி பவார் தெரிவித்தார். குறிப்பிட்ட அந்த நிலம் தொடர்பாக நீண்ட காலமாக நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருந்துள்ளது. அந்த வழக்கு முடிவுக்கு வந்த நிலையில், 150 கோடி ரூபாய் மதிப்புள்ள மூன்று ஏக்கர் நிலம் டிரைவர் பெயரில் தானமாக பதிவு செய்யப்பட்டுள்ளது.
சொத்துக்களை தானமாக வழங்குவது என்றால் ரத்த சம்பந்தமான உறவுகளுக்குள் மட்டுமே வழங்க முடியும் என்பது சட்டம். ஆனால், சம்பந்தப்பட்ட இருவரும் உறவினர்களும் அல்ல. அப்படி இருக்கும் பட்சத்தில் எப்படி இந்த சொத்து தானம் நடந்தது என்பது பலருக்கும் சந்தேகத்தை கிளப்பியுள்ளது.
ஹைதராபாத்தைச் சேர்ந்த சலார் ஜங்கின் சந்ததியினர் ஏன் சத்ரபதி சம்பாஜிநகரில் டிரைவராக பணிபுரியும் ஒருவருக்கு நிலத்தை தானமாக கொடுக்க வேண்டும் என்பது குறித்து பல்வேறு கோணத்தில் போலீசார் துருவி துருவி விசாரிக்கின்றனர்.











மேலும்
-
ஆற்றில் பஸ் கவிழ்ந்து விபத்து சார்தாம் யாத்ரீகர்கள் மூவர் பலி
-
கோல்கட்டாவில் சட்டக்கல்லூரி மாணவிக்கு பாலியல் வன்கொடுமை; 3 பேர் கைது
-
அண்ணாதுரை பெயரை அ.தி.மு.க., அடமானம் வைத்து விட்டது: ஸ்டாலின்
-
புரி ஜெகந்நாதர் கோவிலில் ரத யாத்திரை கோலாகலம்
-
தொடர்ந்து 2 முறை தி.மு.க., வென்றதாக சரித்திரம் இல்லை: நயினார் நாகேந்திரன் பேட்டி
-
இந்திய வம்சாவளி மேயர் வேட்பாளரை இடதுசாரி பைத்தியம் என்கிறார் டிரம்ப்