தரமற்ற உரங்கள் விற்பனை வழக்கு பதிய வேண்டும் உயர்நீதிமன்றம் உத்தரவு

மதுரை: தரமற்ற உயிர் உரம், பூச்சிக் கொல்லிகளை சட்டவிரோதமாக தயாரித்து விவசாயிகளுக்கு விற்பனை செய்யப்படுவதாக புகார்கள் வந்தால் வழக்கு பதிந்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.

மணப்பாறை அப்துல்லா தாக்கல் செய்த பொதுநல மனு:

பூச்சிகள், நோய் தாக்குதலிலிருந்து பயிர்களை பாதுகாக்க உயிர் உரம் (பையோ பெர்டிலைசர்), பூச்சிக்கொல்லிகளை பயன்படுத்துகின்றனர். வெளிநாடுகளிலிருந்து சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்படும் மூலப்பொருட்களை கொண்டு தரமின்றி இத்தகைய உரம், பூச்சிக் கொல்லிகளை சிலர் தயாரிக்கின்றனர். உரிமம் இன்றி கூடுதல் விலைக்கு விற்பனை செய்கின்றனர். தரமற்ற உயிர் உரங்களை தயாரிக்கும் நிறுவனங்களை வேளாண்துறை அதிகாரிகள் கண்டுகொள்வதில்லை. உயிர் உரங்களை விற்பனை செய்வது மற்றும் விற்பனை உரிமம் தொடர்பாக ஆந்திரா அரசு வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளது. தமிழகத்தில் விதை, உரம், பூச்சி மருந்தை தரமாக வழங்க வேண்டும். தரமற்ற உயிர் உரம், பூச்சிக் கொல்லிகளை சட்டவிரோதமாக தயாரித்து விவசாயிகளுக்கு விற்பனை செய்வதை தடுக்க நடவடிக்கை எடுக்க தமிழக வேளாண்துறை முதன்மைச் செயலருக்கு உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு குறிப்பிட்டார்.

நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், ஏ.டி.மரியா கிளீட் அமர்வு பிறப்பித்த உத்தரவு: தரமற்ற உயிர் உரம், பூச்சிக் கொல்லிகளை சட்டவிரோதமாக விவசாயிகளுக்கு விற்பனை செய்யப்படுவதாக புகார்கள் வந்தால் தொடர்புடைய நபர்களுக்கு எதிராக வழக்கு பதிந்து, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். புகார் அளிக்க மனுதாரருக்கும் உரிமை உண்டு. வழக்கு பைசல் செய்யப்படுகிறது. இவ்வாறு உத்தரவிட்டது.

Advertisement