கஜா புயல் பாதிப்பு இழப்பீடு அதிகரிக்க முடியாது: உயர்நீதிமன்றம் உத்தரவு உயர்நீதிமன்றம் உத்தரவு

மதுரை: கஜா புயல் பாதிப்பிற்கு இழப்பீடு தொகையை அதிகரிக்க கோருவதை பரிசீலிக்க முடியாது என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.ராமநாதபுரம் வழக்கறிஞர் திருமுருகன் தாக்கல் செய்த பொதுநல மனு: தமிழகத்தில் 2018 ல் ஏற்பட்ட கஜா புயல் பாதிப்பை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும். இறந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.25 லட்சம், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.10 லட்சம் வழங்க அரசுக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார். நிபுணர் குழு அமைத்து பாதிப்பை கணக்கிடுதல், பாதிக்கப்பட்டோருக்கு கூடுதல் இழப்பீடு வழங்குதல், மறுவாழ்வு பணியை மேற்கொள்ளுதல், மீனவர்களுக்கு ஒதுக்கிய இழப்பீடு ரூ.40 கோடியை ரூ.300 கோடியாக உயர்த்துதல் என்பன உள்ளிட்ட பல்வேறு நிவாரணங்கள் கோரி சிலர் மனுக்கள் தாக்கல் செய்திருந்தனர்.

நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், ஏ.டி.மரியா கிளீட் அமர்வு பிறப்பித்த உத்தரவு: கஜா புயலின் பாதிப்பை நிபுணர் குழு மதிப்பீடு செய்தது. அதன் பரிந்துரைப்படி பாதிக்கப்பட்டோருக்கு அரசு இழப்பீடு வழங்கியுள்ளது. அந்நடைமுறை நிறைவடைந்துள்ளது. இழப்பீட்டை அதிகரித்து வழங்கக் கோரும் நிவாரணத்தை இந்நீதிமன்றம் பரிசீலிக்க முடியாது. பாதிக்கப்பட்டவர்களில் தகுதியானவர்கள் தற்போதும் இருந்தால், அவர்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை அணுக உரிமை உண்டு. மனுக்கள் மீதான விசாரணை முடித்து வைக்கப்படுகிறது. இவ்வாறு உத்தரவிட்டது.

Advertisement