மதுரை காமராஜ் பல்கலை பெயர் மாற்றம் செய்ய வழக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

1

மதுரை: மதுரை காமராஜ் பல்கலை பெயரில் தமிழ், ஆங்கிலத்தில் சில மாற்றங்கள் செய்ய தாக்கலான வழக்கில்,'இதில் நீதிமன்றம் தலையிட இயலாது. பல்கலை முடிவிற்குப்பட்டது,'என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை பைசல் செய்தது.

உடுமலைப்பேட்டை முத்து சுப்பிரமணியன் தாக்கல் செய்த பொதுநல மனு:மதுரை காமராஜ் பல்கலை 1978 வரை மதுரை பல்கலை என அழைக்கப்பட்டது. முன்னாள் முதல்வர் காமராஜரை கவுரவிக்கும் வகையில் பல்கலைக்கு இப்பெயர் சூட்டப்பட்டது. அவர் விருது நகரைச் சேர்ந்தவர். இலக்கண முறைப்படி தமிழில் மதுரைக் காமராஜர் பல்கலை' என பெயர் பலகையில் இடம்பெற வேண்டும். ஆனால் மதுரை காமராஜர் பல்கலை' என உள்ளது.

ஆங்கிலத்தில் மதுரை காமராஜ் பல்கலை' என உள்ளது. அதற்கு பதிலாக ஆங்கிலத்தில் மதுரை காமராஜர் பல்கலை' என பெயர் பலகையில் இடம் பெற நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.

நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், ஏ.டி.மரியா கிளீட் அமர்வு பிறப்பித்த உத்தரவு:

இது பல்கலையில் நிர்வாக ரீதியான முடிவிற்குட்பட்டது. நீதிமன்றம் தலையிட்டு பெயரில் மாற்றம் செய்ய உத்தரவிட இயலாது. மனுதாரர் தவறாக புரிந்து கொண்டு வழக்கு தாக்கல் செய்துள்ளார். அவர் பல்கலை நிர்வாகத்தை அணுகி நிவாரணம் தேடலாம். வழக்கு பைசல் செய்யப்படுகிறது.

இவ்வாறு உத்தரவிட்டது.

Advertisement