ஏர் இந்தியா விமான விபத்து; ஐ.நா., விசாரணையை நிராகரித்தது இந்தியா

9

புதுடில்லி: ஏர் இந்தியா விமான விபத்து தொடர்பான விசாரணைக்கு உதவ ஐ.நா., விமான போக்குவரத்து ஆணையம் முன்வந்தது. ஆனால், இதனை மத்திய அரசு நிராகரித்திருப்பது தற்போது தெரிய வந்துள்ளது.


குஜராத் ஆமதாபாத்தில் கடந்த ஜூன் 12ம் தேதி ஏர் இந்தியா விமானம் கீழே விழுந்து விபத்துக்குள்ளானது. இதில், 270க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இது குறித்து விமான விபத்துகள் விசாரணை ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது. பி.ஜே., மருத்துவக் கல்லுாரி விடுதி கட்டடத்தின் மேற்கூரையில், கருப்புப் பெட்டி கண்டெடுக்கப்பட்டது.


அதன் தரவுகள் விமான விபத்துகள் விசாரணை ஆணையத்தில் பதவிறக்கம் செய்யப்பட்டது. கருப்புப் பெட்டி தரவுகளின் பகுப்பாய்வு நடந்து வருகிறது. CVR மற்றும் FDR தரவுகளின் பகுப்பாய்வு செய்யும் பணி தீவிரமாக நடக்கிறது.



இதனிடையே, ஜூன் 13ம் தேதி முதல் கருப்புப் பெட்டியும், ஜூன் 16ம் தேதி 2வது கருப்புப் பெட்டியும் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், விசாரணை குறித்து எந்த தகவலும் இல்லாதது பற்றி கேள்வி எழுந்து வருகிறது. தரவுகளை பகுப்பாய்வு செய்யும் பணிகள் இந்தியாவில் நடக்கிறதா? அல்லது அமெரிக்காவில் நடக்கிறதா? என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.


இந்த நிலையில், ஏர் இந்தியா விமான விபத்து தொடர்பான விசாரணைக்கு உதவ ஐ.நா., விமான போக்குவரத்து ஆணையம் முன்வந்தது. ஆனால், இதனை மத்திய அரசு நிராகரித்திருப்பது தற்போது தெரிய வந்துள்ளது. சர்வதேச சிவில் விமான போக்குவரத்து அமைப்பின் விதிகளை பின்பற்றி, உள்நாட்டு விசாரணை நடத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


பெரும்பாலான விமான விபத்துக்களின் முதற்கட்ட அறிக்கைகள், விபத்து நடந்த 30 நாட்களுக்குள் வெளியிடப்படும். அந்த வகையில், கருப்பு பெட்டியில் இருக்கும் தரவுகள் பகுப்பாய்வு செய்யப்பட்டு, இன்னும் ஓரிரு வாரங்களுக்குள் ஏர் இந்தியா விமான விபத்துக்கான முதற்கட்ட அறிக்கை வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement