8 நாட்கள் பயணம்: 5 நாடுகளுக்கு செல்கிறார் பிரதமர்

1

புதுடில்லி: பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்கவும், உலகின் தெற்கு பகுதியில் உள்ள நாடுகளுடன் உறவை மேம்படுத்தவும், 8 நாட்கள் அரசு முறை பயணமாக பிரதமர் மோடி ஜூலை 2 முதல் 5 நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார்.


இது தொடர்பாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க பிரேசில் செல்லும் பிரதமர் மோடி, அதனைத் தொடர்ந்து கானா, ட்ரினிடாட் மற்றும் டுபாக்கோ, அர்ஜென்டினா, நமீபியா நாடுகளுக்கு செல்ல உள்ளார்.

கானா




முதலாவதாக ஜூலை 2 முதல் 3 வரை கானாவில் சுற்று பயணம் மேற்கொள்கிறார். இந்த நாட்டிற்கு பிரதமர் மோடி முதல்முறையாக செல்கிறார். கடந்த 3 தசாப்தங்களில் கானா நாட்டிற்கு செல்லும் முதல் பிரதமர் என்ற பெருமையையும் மோடி பெறுகிறார். அந்நாட்டு அதிபரை சந்தித்து, இரு தரப்பு ஒத்துழைப்பு குறித்து விவாதிக்கும் மோடி, பொருளாதாரம், எரிசக்தி மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பு ஆகியவற்றில் உறவை வலுப்படுத்துவது குறித்து ஆலோசிக்கிறார்.

ட்ரினிடாட் மற்றும் டுபாக்கோ




இதன் பிறகு, 2 நாள் பயணமாக ட்ரினிடாட் மற்றும் டுபாக்கோவுக்கு செல்கிறார். 1999ம் ஆண்டுக்கு பிறகு அங்கு செல்லும் முதல் பிரதமர் என்ற பெருமை மோடியை சாரும்.
அந்நாட்டு அதிபர் கிறிஸ்டைன் கர்லா மற்றும் பிரதமர் கமலா பிரசாத் ஆகியோரை சந்திக்க உள்ளார். அந்நாட்டு பார்லிமென்டின் கூட்டுக்கூட்டத்தில் உரையாற்றுகிறார்.


அர்ஜென்டினா




3வது நாடாக அர்ஜென்டினாவுக்கு ஜூலை 4 மற்றும் 5 ஆகிய தேதிகளில் சுற்றுபயணம் மேற்கொள்கிறார். அந்நாட்டு அதிபர் ஜாவியர் மிலாயை சந்திக்கும் மோடி, பாதுகாப்பு, விவசாயம், சுரங்கம், எண்ணெய் மற்றும் காஸ், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, வர்த்தகம் மற்றும் முதலீடு ஆகியவை குறித்து ஆலோசிக்கிறார்.



பிரிக்ஸ் மாநாடு




இதன் பின்னர் பிரேசில் அதிர் லூயிஸ் இனாசியோ லூலா சில்வா அழைப்பின் பேரில் அந்நாட்டிற்கு மோடி செல்கிறார். அங்கு 5 முதல் 8 ம் தேதி வரை தங்கி உள்ள அவர், அந்நாட்டு அதிபருடன் வர்த்தகம், பாதுகாப்பு , எரி்சக்தி,, விண்வெளி, தொழில்நுட்பம், விவசாயம் மற்றும்சுகாதாரம் குறித்தும் ஆலோசிக்க உள்ளார்.

பிரிக்ஸ் மாநாட்டிலும் பங்கேற்கும் மோடி, சர்வதேச அமைப்புகளின் சீர்திருத்தம், அமைதி, பாதுகாப்பு, பருவநிலை மாற்றம், பொருளாதார பிரச்னைகள் குறித்த இந்தியாவின் நிலைப்பாட்டை எடுத்துரைக்கிறார். மாநாட்டிற்கு இடையே பல்வேறு நாட்டு தலைவர்களையும் சந்திக்கிறார்.

நமீபியா

கடைசியாக நமீபியா செல்கிறார். அந்நாட்டு அதிபருடன் இரு தரப்புஉறவுகள் குறித்து விவாதிக்க உள்ளார். பிரதமர் மோடி 3வதுமுறையாக நமீபியா செல்ல உள்ளார்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

Advertisement