செக்போஸ்ட்

பள்ளிகளில் முறைகேடு நடப்பதாக வட்டார கல்வி அதிகாரிக்கு புகார் போனது. விசாரித்த ஆபீசரோட பாக்கிட்டை சம்பளத்தை விட கிம்பளத்த நிரப்பி, அவரை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்காதபடி முடக்கிட்டாங்க.

விபரம் அறிந்த புகார்தாரர், மாவட்ட கல்வி ஆபீசரிடமும், லோக் ஆயுக்தாவுக்கும் புகார் செய்தாரு.

அந்த மாவட்ட கல்வி ஆபீசருக்கு, '5 எல்' கிப்ட் போய் சேர்ந்ததா வதந்தி. இதனால், அந்த ஆபீசரும் கூட மவுனமாகிட்டாராம்.

புகார் செய்தவர், என்ன நடவடிக்கை எடுத்தீங்கன்னு, மாவட்ட ஆபீசரை போய் கேட்டாரு.

'பெருசா நீ என்ன எதிர்ப்பாக்குறே. உனக்கு நான் 5,000 தரேன், பள்ளியும் டபுளா பணம் தருவதாக சொல்லி இருக்காங்க. போய் வாங்கிக்க'ன்னு ஆபீசரு சொல்லி இருக்காரு.

'பணம் எனக்கு வேணாம்'னு சொல்லி விட்டு புகார்தாரர் வெளியே வந்துவிட்டார். ஆனா ஆபீசர் பேசினதை, அவர் 5,000 கொடுக்க முன்வந்தத ஆடியோ - வீடியோ பதிவு செய்து, சமூக வலைத்தளங்கள்ல வைரலாக்கிட்டாராம்.

இவை எல்லாமே லோக் ஆயுக்தா ஆபீசர்கள் கொடுத்த 'ஐடியா' தான்னு, புகார் அளிச்ச மீடியாக்காரர் சொல்றார்.

அந்த பள்ளிக்கு, வட்டார, மாவட்ட ஆபீசர்களுக்கு வலைத்தள வைரல் குளிர்க் காய்ச்சல், நடுக்கத்த உண்டு பண்ணிருக்கு. வேலியே பயிரை மேயுதே.

முனிசி.,யில் அதிகாரம் யாரிடம் என்பதே மர்மமாக இருக்குது. எல்லா அதிகாரமும் தலைவருக்கு தான் இருக்குதென நம்ப முடியல.

அந்த அதிகாரம் எல்லாமே அசெம்பிளிக்காரர் கன்ட்ரோலில் தான் இருப்பதாக ஆரம்பத்தில் சொன்னாங்க.

அதன்படியே 'அம்மாவே சரணம்' என்றாங்க.

அதன்படி அம்மா ஆசி நீடிக்குதா.

நான்கு ஆண்டுகள் வரை நிலைக்குழுவுக்கு சேர்மனே இல்லாமல் இருந்த குறையை தீர்த்து, மனஸ்தாபத்தில் இருந்த 'மாஜி' ஒருவருக்கு பட்டாபிஷேகம் செஞ்சு வச்சாங்க.

அவரும் ஓரிரு வாரங்கள் மட்டுமே அவரின் அதிகாரம் மவுன கீதம் வாசித்தது. அதன்பின், முனிசி.,யே தனது கட்டுப்பாட்டுக்குள் உள்ளதாக ஆட்டமும், கூட்டமும், மீடியாவில் படம் காட்டி, ஆட்டி வைப்பதாக ஊரையே பேச வெச்சிருக்கு.

இவரின் அதிகாரமும் கூட 'அம்மா'வின் ஆணையா அப்பிடிங்கிற கேள்வி, நகர்ல வலம் வந்துகிட்டு இருக்கு. வரம்பை மீற வழி தந்தது ஏனோ.

ஏற்கனவே முனிசி., தலைவர் பதவிக்காக செலவிட்ட பல 'எல்' முழுசா மீட்க முடியல என்று வட்டார பேச்சும் சுழலுது.

இதுக்கு மத்தியில் தலைவர் 'பவர் லெஸ்' ஆகிவிட்டரா என்ற வருத்தமான கேள்வியும் ஆதரவு குரல்கள் அங்கலாய்க்கிறது.

புதர்களை, குப்பை கழிவுகள அகற்ற பிரசிடென்ட் 10 ஜேசிபிகள்; ஸ்டேண்டிங் சேர்மன் 10 ஜேசிபிகள் அனுப்புவதாக மீடியாக்களில் பேச வெச்சிருக்காங்க.

ஆனால் இவற்றுக்கு 'பில்' தரும் அதிகாரம் யாரிடம் இருக்குதோ.

முனிசி., ஜேசிபி ஒர்க் ஆகாமல் இருந்ததே அது ரிப்பேர் ஆகிவிட்டதோ.

வி.பி., என்பவர் ஒருவர் அதிகாரத்தில் இருக்றாரு. அவரோட பவர் என்னவென ஜனங்க கேட்கிறாங்க. யார் இதுக்கு பதில் சொல்வது.

யாரிடம் உள்ளது முனிசி.,யின் அதிகாரம்.

கொளுத்தி விட்டு குளிர்க்காயும் மீடியாகாரர்களுக்கு கொண்டாட்டம் தான். தினமும் அறுவடை தான்.

இருக்கிற முனிசி.,யின் கவுன்சிலர்களில் சிலப்பேர் இப்பவே எலக் ஷனுக்கு தயாராகி வராங்க. கட்சிகளின் தலைமையில் அதிருப்தியில் இருப்பவங்க கூடு விட்டு கூடு தாவ, தங்களின் சொகுசான இடத்துக்கு இடமாற உள்ளுக்குள் பேசி வராங்க.

பணம் அள்ளித்தரும் கிராமத்துக்காரரின் கதவை தட்டும் வேலை ரகசியமாக நடந்து வருது.

அசெம்பிளி தேர்தலுக்கு முன் முனிசி., தேர்தல் நடக்க இருப்பதால், சிட்டிகாரர்களுக்கு இனி இனி அசெம்பிளி பாக்கியம் எட்டா கனி. சீ..சீ.. இந்த பழம் புளிக்கிறது என்று சொல்லிக்கொண்டே இருக்க வேணும்.

அதனாலே முனிசி., தலைவர் பதவிக்கு தான் இனி போட்டி. அதுக்கு இப்பவே பெரிய தலைவருக்கு ஆசை வந்திருக்கு. அசெம்பிளி தேர்தலில் நிற்பதை அவர் தவிர்த்து, அதை கிராமத்துக்காரருக்கு விட்டு கொடுத்து, ஒரு உள் ஒப்பந்தமும் தயாராகி வருதாம்.

குறைந்தபட்சம் 20 இடங்களில் ஜெயித்துக்காட்டப் போறாங்களாம். அதற்காக பணம் ஒரு பிரச்னையே இல்லை என்கிறாங்க.

அதனால் கைகட்சியிலும், ஆதரித்தவங்களும், இடம் மாறும் நேரம் வெகு தூரம் இல்லை. கோல்டு சிட்டி இதை வேடிக்கை பார்க்கத் தானே போறாங்க.

சீ..சீ... இந்த பழம் புளிக்கிறது?

Advertisement