வாரிய தலைவர் பதவி அளிக்க பா.ஜ., முடிவு; விரைவில் அறிவிப்பு வெளியாகிறது

புதுச்சேரி: அமைச்சர் சாய்சரவணன், நியமன எம்.எல்.ஏ.,க்கள் அடுத்தடுத்து ராஜினமா செய்த நிலையில் பா.ஜ., எம்.எல்.ஏ.,க்கள்,முக்கிய நிர்வாகிளுக்கு வாரிய தலைவர் பதவி கொடுத்துகுஷிப்படுத்த பா.ஜ., மேலிடம் திட்டமிட்டுள்ளது.
புதுச்சேரியில் என்.ஆர்.காங்., பா.ஜ., கூட்டணி அரசு கடந்த 2021ம் ஆண்டு பொறுப்பு ஏற்றது. ஆட்சி பொறுப்பு ஏற்றது முதல் கூட்டணி கட்சியான பா.ஜ., மற்றும் பா.ஜ.வுக்கு ஆதரவு தரும் சுயேச்சை எம்.எல்.ஏ.,க்கள் வாரிய தலைவர் பதவி கேட்டு புலம்பி வந்தனர்.
ஆனாலும், வாரிய தலைவர் பதவிகள் வழங்கப்படவில்லை. இது பா.ஜ., எம்.எல்.ஏ.,க்கள் இடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. டில்லி வரை சென்று கட்சி மேலிடத்திடம் முறையிட்டு வந்தனர். ஆனாலும் ஒன்றும் நடந்துவிடவில்லை.
அனைத்து வாரியங்களும் நஷ்டத்தில் இயங்கி வருகின்றன.
அப்புறம் எதற்காக வாரிய தலைவர் பதவிகளை நியமிக்க வேண்டும் என, முதல்வர் ரங்கசாமி தடாலடியாக கைவிரித்துவிட்டார். இதனால் வாரிய தலைவர் பதவி கொடுக்காமல் முதல்வர் ரங்கசாமி, முட்டு கட்டை போட்டார்.
இப்படி இருந்தால் கட்சியை வளர்க்க முடியாது என, பகிரங்கமாகவே கட்சி மேலிடத்திடம் பா.ஜ., எம்.எல்.ஏ.,க்கள் மீண்டும் புகார் தெரிவித்தனர்.
தற்போது அமைச்சர் சாய்சரவணன்குமார், நியமன எம்.எல்.ஏ.,க்கள் அடுத்தடுத்து ராஜினமா செய்த நிலையில் சட்டசபை தேர்தலுக்கு முன்பாக பா.ஜ., எம்.எல்.ஏ.,க்கள், முக்கிய நிர்வாகிளுக்கு வாரிய தலைவர்கள் பதவிகள் கொடுத்து குஷிப்படுத்த பா.ஜ., மேலிடம் திட்டமிட்டுள்ளது. விரைவில் இதற்கான அறிவிப்பு வெளியாக உள்ளது.
பா.ஜ., தலைமை நேரடியாக முதல்வர் ரங்கசாமியிடம் பேசி, வாரிய தலைவர் பதவியை பெற்று தருவதற்காக தற்போது மீண்டும் உறுதியளித்துள்ளது.
முதல்வர் ரங்கசாமி மற்றும் என்.ஆர்.காங்., அமைச்சர்கள் துறைகளில் வாரியங்கள் உள்ளன.
இந்த துறைகளில் வாரியங்கள் கேட்க பா.ஜ.,விற்கு விருப்பம் இல்லை. பா.ஜ., அமைச்சர்களிடம் இருந்த துறைகளின் கீழ் உள்ள நிறுவனங்களில் வாரிய தலைவர் பதவி தர திட்டமிட்டுள்ளது. இதனால் என்.ஆர்.காங்., கட்சிக்கும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
ஆளும் கட்சியாக இருந்தபோதிலும் என்.ஆர்.காங்., எம்.எல்.ஏ.,க்களும் வாரிய தலைவர் பதவி கிடைக்காமல் சோர்வான நிலையில் உள்ளனர். கட்சிக்கு உழைத்தவர்களுக்கு உரிய அந்தஸ்து கிடைக்கவில்லை எனவும் புலம்பி வருகின்றனர்.
சட்டசபை தேர்தலை சந்திக்கும் முன், கட்சியினரை உத்வேகப்படுத்த வேண்டும். தொகுதிகளில் ஓட்டுகளை பெற்றுத் தரும் எம்.எல்.ஏ.,க்கள், முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள், முக்கிய பிரமுகர்களுக்கு வாரிய தலைவர் பதவி வழங்குவது அவசியம் என்றும் என்.ஆர்.காங்., தொண்டர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
எனவே என்.ஆர்.காங்., எம்.எல்.ஏ.,க்கள், முக்கிய நிர்வாகிளுக்கும் விரைவில் வாரிய தலைவர் பதவிகள் கிடைக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.