ஜோகோவிச்-சின்னர் மோதல்: விம்பிள்டன் அரையிறுதியில் வாய்ப்பு

லண்டன்: விம்பிள்டன் டென்னிஸ் அரையிறுதியில் இத்தாலியின் சின்னர், செர்பியாவின் ஜோகோவிச் மோதும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
லண்டனில், வரும் ஜூன் 30 முதல் ஜூலை 13 வரை விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர் நடக்க உள்ளது. இதன் ஒற்றையர் பிரிவுக்கான அட்டவணை வெளியானது.

ஆண்கள் ஒற்றையர் அரையிறுதியில் உலகின் 'நம்பர்-1' இத்தாலியின் ஜானிக் சின்னர், விம்பிள்டனில் 7 முறை சாம்பியன் பட்டம் வென்ற செர்பியாவின் நோவக் ஜோகோவிச்சை சந்திக்கலாம். சமீபத்தில் பிரெஞ்ச் ஓபன் அரையிறுதியில் இவர்கள் மோதினர். இதில் ஜோகோவிச் வெற்றி பெற்றார்.

'நடப்பு சாம்பியன்' ஸ்பெயினின் கார்லஸ் அல்காரஸ், அரையிறுதியில் ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வெரேவை எதிர்கொள்ளலாம். தொடர்ச்சியாக 2 முறை (2023, 2024) கோப்பை வென்ற அல்காரஸ், தனது முதல் சுற்றுப் போட்டியில் சகவீரர் பேபியோ போக்னினியை சந்திக்கிறார்.

பெண்கள் ஒற்றையர் காலிறுதியில் பெலாரசின் அரினா சபலென்கா, அமெரிக்காவின் மடிசன் கீஸ் மோதும் வாய்ப்பு உள்ளது. மற்றொரு காலிறுதி போட்டியில் அமெரிக்காவின் கோகோ காப், போலந்தின் இகா ஸ்வியாடெக் அல்லது கஜகஸ்தானின் எலினா ரிபாகினாவை சந்திக்கலாம்.

'நடப்பு சாம்பியன்' செக்குடியரசின் பார்போரா கிரெஜ்சிகோவா, தனது முதல் சுற்று போட்டியை பிலிப்பைன்சின் அலெக்சாண்ட்ரா ஈலாவுடன் விளையாடுகிறார்.

Advertisement