தாழ்வாக செல்லும் மின் கம்பிக்கு மரக்கம்பால் முட்டு கொடுத்த மக்கள்

உத்திரமேரூர்:தளவராம்பூண்டி சாலையின் குறுக்கே தாழ்வாக செல்லும் மின் கம்பிகளுக்கு கம்பால் முட்டு கொடுக்கப்பட்டுள்ளது.

உத்திரமேரூர் -- புக்கத்துறை நெடுஞ்சாலையில் இருந்து பிரிந்து, தளவராம்பூண்டி செல்லும் சாலை 2.5 கி.மீ., துாரமுடையது.

இந்த சாலையை பயன்படுத்தி அப்பகுதி மக்கள் பல்வேறு பகுதிகளுக்கு சென்று வருகின்றனர்.

மேலும், டிராக்டர்களில் வைக்கோல் உள்ளிட்ட விவசாய இடுபொருட்களையும் ஏற்றிச் செல்கின்றனர். இந்த சாலையின் ஓரங்களிலும், அதை சுற்றியுள்ள விவசாய நிலங்களிலும் மின் வாரியம் சார்பில், மின் கம்பங்கள் நடப்பட்டு மின்சாரம் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

தற்போது, இந்த சாலையின் குறுக்கே மின் வழித்தடம் ஒன்று செல்கிறது. இந்த மின் வழித்தடத்தில் மின் கம்பிகள் தாழ்வாக செல்கின்றன. இதனால், அவ்வழியே செல்லும் வாகனங்கள் மின் கம்பிகளின் மீது உரசி, மின் விபத்து ஏற்படும் நிலை இருந்தது.

எனவே, அப்பகுதி மக்களே கம்பினால் முட்டு கொடுத்து மின் கம்பிகளை துாக்கி நிறுத்தியுள்ளனர். கம்பு விலகினால் அப்பகுதியில் மின் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.

எனவே, மின் கம்பிகளை துாக்கி நிறுத்தியுள்ள கம்பை அகற்றி, மின் கம்பம் நட மின்வாரியத் துறையினர் நடவடிக்கை எடுக்க, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement