அமைச்சரின் வருகைக்காக அவசர கதியில் சாலை அமைப்பு

சிங்கப்பெருமாள் கோவில்:சிங்கபெருமாள்கோவில் அடுத்த மகேந்திரா சிட்டி -- செட்டிபுண்ணியம் சாலை 4 கி.மீ., துாரம் கொண்டது. இந்த சாலையை சுற்றுப்பகுதிகளில் உள்ள 10க்கும் மேற்பட்ட கிராமத்தினர் பயன்படுத்தி வருகின்றனர்.
இந்த சாலையில் குண்டும் குழியுமாக இருந்ததால், சாலையை சீரமைக்க கோரி பல முறை, பொதுமக்கள் கோரிக்கை விடுத்தும், வனத்துறை அனுமதி கிடைக்கவில்லை.
இதனால், 10 ஆண்டுகளுக்கு மேலாக கிராம மக்கள் அவதியடைந்து வந்தனர்.
இந்நிலையில் நேற்று, செட்டிபுண்ணியம் கிராமத்தில் உள்ள தேவநாதபெருமாள் கோவில் கும்பாபிஷேகத்திற்கு
அமைச்சர் அன்பரன், எம்.பி., மற்றும் எம்.எல்.ஏ., உள்ளிட்டோர் வந்தனர். இதையடுத்து, அமைச்சர் வருவதை அறிந்த அதிகாரிகள், நேற்று முன்தினம் சிதிலமடைந்த சாலையை, அவசர கதியில் சீரமைத்து தார்ச்சாலை அமைத்து உள்ளனர்.
இது குறித்து வாகன ஓட்டிகள் கூறியதாவது:
இந்த சாலையை கடந்த காலங்களில் சீரமைத்த போது, வனத்துறை அதிகாரிகள் தடுத்து நிறுத்தி கைது செய்வோம் எனக் கூறினர். தற்போது அமைச்சர் வருகைக்காக இருவழிச் சாலையில் ஒரு வழி மட்டும், தார்ச்சாலை குறுகலாக அமைக்கப்பட்டு உள்ளது. இதில் இரண்டு வாகனங்கள் ஒரே நேரத்தில் செல்லும் போது சாலை மீண்டும் சேதமடையும். அவரச கதியில் அமைக்கப்பட்ட சாலையின் தரமும் சந்தேகப்படும் வகையில் உள்ளது.
எனவே அதிகாரிகள் ஆய்வு செய்து, விடுபட்ட பகுதிகளில் முறையாக சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.