தேசிய டென்னிஸ் போட்டி சென்னை மாணவியர் அசத்தல்

சென்னை:தேசிய அளவில் நடந்த டென்னிஸ் போட்டியில், இரட்டையரில் சென்னை எஸ்.டி.ஏ.டி., மாணவியர் தீப்தி, தனுஸ்ரீ முதல் இடத்தை பிடித்து அசத்தினர்.

அகில இந்திய டென்னிஸ் சங்கம் சார்பில், 16 வயதுக்கு உட்பட்டோருக்கான மகளிர் டென்னிஸ் போட்டி, நுங்கம்பாக்கம் எஸ்.டி.ஏ.டி., சர்வதேச டென்னிஸ் மைதானத்தில், கடந்த 23ம் தேதி துவங்கி, நேற்று நிறைவு பெற்றது.

இதில், நாட்டின் சிறந்த டென்னிஸ் வீராங்கனையர் பங்கேற்றனர். போட்டி ஒற்றையர் மற்றும் இரட்டையர் என இரு பிரிவாக நடந்தது.

இதில் இரட்டையர் பிரிவு இறுதி போட்டியில் எஸ்.டி.ஏ.டி., சென்னை மாணவியர் தீப்தி - தனுஸ்ரீ ஜோடி, சுஹானி பாசின் - சரித்ரா ஜோடியை எதிர்த்துப் போட்டியிட்டது. இதில் தீப்தி - தனுஸ்ரீ ஜோடி 6 - 2, 6 - 2 என்ற நேர்செட் கணக்கில், வெற்றி பெற்று, சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.

நேற்று நடந்த ஒற்றையர் பிரிவு போட்டியில், சென்னை மாணவி தீப்தி, மற்றொரு சென்னை மாணவி தனுஸ்ரீ மோதினர். இந்த போட்டியில், தீப்தி 6 - 0, 6 - 2 என்ற நேர்செட்டில் வென்று அசத்தினார்.

Advertisement