'சிந்தடிக்' போதை பயன்படுத்துவோர் அதிகரிப்பு; இளைஞர்களின் மனநலம் பாதிக்கும்!

மதுரை: தமிழகத்தில் மூன்றாண்டுகளாக 'சிந்தடிக் போதை' பொருட்களை பயன்படுத்துவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக மதுரை அரசு மருத்துவமனை மனநலத்துறை பேராசிரியர் ஜான் சேவியர் சுகதேவ் தெரிவித்தார்.
உலகளவில் ஆல்கஹால் பானம் தடைசெய்யப்பட்ட போதைப் பொருட்கள் பட்டியலில் சேர்க்கப்படவில்லை. கஞ்சா, கொகைன், கனாபிஸ் எனப்படும் போதைப் பொருட்கள் தடைசெய்யப்பட்டுள்ள பட்டியலில் இடம்பெற்றுள்ளது.
இவற்றை வாங்குவோருக்கும் விற்போருக்கும் தண்டனை உண்டு என்பதால் அதற்கு மாற்றாக செயற்கை முறையில் வேதியியல் பொருட்களை கொண்டு உருவாக்கப்படும் போதைப் பொருட்கள் பயன்படுத்துவோர் அதிகரித்து வருகின்றனர்.
எம்.டி.எம்.ஏ.,- எல்.எஸ்.டி., போன்ற 'சிந்தடிக்' போதைப் பொருட்களை பயன்படுத்தும் போது படபடப்பு, மனநல பிரச்னை, மனப்பதட்டம், இதயபாதிப்பு போன்ற பிரச்னைகள் வரலாம் என கணிக்கப்படுகிறது.
இது குறித்து பேராசிரியர் ஜான் சேவியர் சுகதேவ் கூறியதாவது: உலகளவில் 32 கோடி பேர் போதைப் பொருட்களை பயன்படுத்துவதாக உலக போதை (வேர்ல்டு டிரக் ரிப்போர்ட்) குறித்த ஆய்வறிக்கை தெரிவிக்கிறது. அதில் 6.4 கோடி பேர் சிகிச்சையில் உள்ளனர்.
24 கோடி பேர் கஞ்சா பொருட்களுக்கும் 1.4 கோடி பேர் போதை ஊசிக்கும் அடிமையாகி உள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் எச்.ஐ.வி., ஹெபடிட்டிஸ் வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் 2019 ல் மத்திய சமூகநீதி அமைச்சகம் வெளியிட்ட ஆய்வில் 16 கோடி பேர் ஆல்கஹால் பயன்படுத்துவதாக கூறப்பட்டுள்ளது.
இதில் 5.7 கோடி பேர் ஆல்கஹாலுக்கு அடிமையானவர்கள். மூன்று கோடி பேர் கஞ்சாவை பயன்படுத்துகின்றனர், அதில் 72 லட்சம் அடிமையாகியுள்ளனர். மூன்று கோடி பேர் ஓபியம் பயன்படுத்துகின்றனர், இதில் 80 லட்சம் பேர் அடிமையாகியுள்ளனர்.
சிறுவர்களும் அடிமை
தின்னர், பெயின்ட் போன்ற வேதிப் பொருட்களை முகர்ந்து போதையை அனுபவிக்கும் பழக்கம் பள்ளி மாணவர்களிடையே அதிகரித்துள்ளது. தமிழகத்தில் எம்.டி.எம்.ஏ., எல்.எஸ்.டி., மெத்தம்பெட்டமைன் எனப்படும் 'சிந்தடிக்' போதைப் பொருட்களை பயன்படுத்துவோர் அதிகரித்துள்ளனர். இது புதுவகை போதை போன்று மனநலத்தைத் துாண்டி தவறாக வழிநடத்துகிறது.
கஞ்சா, ஓபியம் போன்ற தடைசெய்யப்பட்ட பொருட்களை மூன்றாம் நபரிடம் வாங்குவது 'ரிஸ்க்' என்பதால் இந்த செயற்கை போதைப் பொருட்கள் 'டார்க்நெட், டெலிகிராம், கொரியன் நெட்வொர்க்' மூலம் வாங்கி பயன்படுத்துவதாக தகவல்கள் வருகின்றன.
இவற்றை கண்டுபிடிப்பது கடினம். தேசிய குற்றப்பதிவேடு அறிக்கை படி கடந்த மூன்றாண்டுகளில் 'சிந்தடிக்' போதை பொருட்களை பறிமுதல் செய்வது மூன்று மடங்காக அதிகரித்துள்ளது. கைது செய்யப்பட்டவர்கள் பெரும்பாலும் 25 வயதுக்குட்பட்டவர்களாக உள்ளனர்.
பள்ளி, கல்லுாரி பருவத்தில் நீண்டநாட்களாக போதைக்கு அடிமையானவர்களின் மனநலம் பாதிக்கப்பட்டு மனச்சோர்வு ஏற்படும். மனரீதியான பாதிப்புகள் அதிகமாகும் என்றார்.




மேலும்
-
வி.சி.க.,வுக்கு முதல்வர் எத்தனை சீட் தருவார்? கேட்கிறார் நயினார் நாகேந்திரன்
-
பிரதமர் மோடிக்கு 'தர்ம சக்ரவர்த்தி' பட்டம் கொடுத்து கவுரவிப்பு
-
இடையூறுகளை முறியடித்து கடக்கும் வலிமை கொண்டது தி.மு.க.,: சொல்கிறார் முதல்வர் ஸ்டாலின்
-
சென்னை ஐ.ஐ.டி., மாணவி பாலியல் வழக்கு; மகளிர் ஆணையம் விசாரணை
-
கோர்ட்டில் ஆர்ப்பாட்டம் செய்தவர் மீது வழக்கு
-
பாஸ்போர்ட் அலுவலக பணியாளர்களுக்கு விருது