மழைநீர் வடிகால்வாயில் கழிவுநீர் வாரியமே விடுவதாக குற்றச்சாட்டு

சூளைமேடு,:பாதாள சாக்கடை கழிவுநீரை மோட்டார் வாயிலாக மழைநீர் வடிகால்வாயில் குடிநீர் வாரிய ஊழியர்களே விடுவதாக, சூளைமேடு பகுதிமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

அண்ணா நகர் மண்டலம் சூளைமேடு பகுதியில், கோடம்பாக்கம், சூளைமேடை இணைக்கும் பகுதியில் அண்ணா நெடும்பாதை உள்ளது.

இச்சாலையைச் சுற்றி, கண்ணி நகர், பாரி தெரு, நேரு தெரு, ஆண்டவர் தெரு உள்ளிட்ட தெருக்களில் ஆயிரக்கணக்கானோர் வசிக்கின்றனர். அதேபோல், காய்கறி சந்தையும் செயல்படுகிறது.

இந்நிலையில், அண்ணா நெடும்பாதையில் உள்ள பாதாள சாக்கடையில் நேற்று அடைப்பு ஏற்பட்டது. இதனால், கழிவுநீர் செல்ல வழியின்றி பல்வேறு தெருக்களில் தேங்கியது.

இதுகுறித்து தகவலறிந்து வந்த குடிநீர் வாரிய ஊழியர்கள், பாதாள சாக்கடையில் குழாயை விட்டு, மோட்டார் வாயிலாக தண்ணீரை மட்டும் உறிஞ்சி, நேரு தெரு மற்றும் ஆண்டவர் தெரு நடுவில் செல்லும் மழைநீர் வடிகால்வாயில் விட்டனர்.

மழைநீர் கால்வாயில் கழிவுநீர் விட தடை இருந்தும், வாரிய ஊழியர்கள் இவ்வாறு தொடர்ச்சியாக இதை செய்வதாகவும், சாக்கடை அடைப்பை நிரந்தரமாக நீக்காமல் தற்காலிகமாக தயார் செய்வதால், காய்கறி சந்தை பகுதியில் கழிவுநீர் தேங்கி சுகாதார சீர்கேடு ஏற்படுவதாகவும், அப்பகுதிமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

Advertisement