போலீசிடம் இருந்து தப்ப முயன்ற திருடனை துரத்தி பிடித்த நாய்

சென்னை:போலீசிடம் இருந்து தப்பியோடிய திருடனை, ரயில்வே பாதுகாப்பு படையினரின் வளர்ப்பு நாய் துரத்தி சென்று கவ்வி பிடித்தது, சுவாரஸ்யத்தை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை சென்ட்ரல் புறநகர் ரயில் நிலையத்தில், சந்தேகத்துக்கு இடமான வகையில் சுற்றித்திரிந்த ஆசாமியை பிடித்து போலீசார் விசாரித்தனர்.

இதில், செயின் பறிப்பு வழக்கில் தொடர்புடையவர்என்பது தெரியவந்தது. உடனே, போலீஸ்காரரின்கையை தட்டி விட்டு ஓட்டம் பிடித்தார்.

அடுத்த வினாடியே, அருகில் படுத்துக்கிடந்த ரயில்வே பாதுகாப்பு படையினரின் வளர்ப்பு நாய் ஒன்று, பாய்ந்து சென்று திருடனை கவ்விப்பிடித்தது. போலீஸ்காரர் அவரது சட்டையை பிடித்து இழுத்து வந்தார்.

காவல் நிலையம் வரும் வரை, அவனது பேன்டை கவ்வி பிடித்தபடியே, நாயும் வந்தது. இதை, அங்கு இருந்த பயணியர் சிலர் வீடியோவாக எடுத்து, சமூக வலைத்தளங்களில் பதிவிட, வேகமாக பரவியது.

இது குறித்து, ரயில்வே பாதுகாப்பு படை போலீஸ்காரர்கள் கூறியதாவது:

சென்னை சென்ட்ரல்ரயில்வே பாதுகாப்பு படைக்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன், குட்டியாக வந்தது. நாங்கள் பணிக்கு செல்லும்போது, பின் தொடர்ந்து வரும். எங்களின் பணியை உன்னிப்பாக கவனிக்கும்.

சில மாதங்களிலே, ரயிலில் பயணியர் எவராவது படியில் தொங்கியபடி சென்றால், அவர்களை கடிப்பது போல் பயமுறுத்தும். இந்த நாய்க்கு 'டைகர்' என பெயரிட்டுள்ளோம். பசிக்கு உணவளித்த நன்றி கடனுக்கு, எங்களுக்கு விசுவாசமாக இருக்கிறது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement