நெல்லையப்பர் கோயில் தேரோட்டத்தில் ஜாதி கொடிகளுக்கு தடை விதிக்க வழக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

மதுரை: திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில் தேரோட்ட திருவிழாவில் ஜாதி ரீதியான டீ-ஷர்ட் அணிய, கொடியை பயன்படுத்த தடை கோரிய வழக்கில்,'அறநிலையத்துறை அதிகாரிகள் போலீசாருடன் ஒருங்கிணைந்து விதிகள், பாரம்பரிய நடைமுறைகளை பின்பற்றி அமைதியான முறையில் விழா நடத்துவதை உறுதி செய்ய வேண்டும்,' என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.

திருநெல்வேலி மாதவன் தாக்கல் செய்த பொதுநல மனு:திருநெல்வேலி நெல்லையப்பர் மற்றும் காந்திமதி அம்மன் கோயில் ஆனி தேரோட்ட திருவிழா ஜூலை 8 ல் நடைபெற உள்ளது.

ஆண்டுதோறும் இத்திருவிழாவில் சிலர் ஜாதி ரீதியான டீ-ஷர்ட் அணிந்து, ரிப்பன்களை கையில் வைத்துக் கொள்கின்றனர். ஜாதி கொடியை பயன்படுத்துகின்றனர்.

ஜாதி ரீதியான வண்ணங்களைக் கொண்ட பட்டாசுகளை வெடிக்கச் செய்கின்றனர்.

சமுதாய தலைவர்கள் பற்றி வாழ்க, ஒழிக கோஷமிடுகின்றனர்.

இதனால் மோதல் ஏற்படுகிறது. சட்டம்-ஒழுங்கு பாதிக்கிறது. பக்தர்கள் மன உளைச்சல் அடைகின்றனர். தேரோட்ட திருவிழாவில் ஜாதி ரீதியான டீ-ஷர்ட் அணிய, கொடியை பயன்படுத்த, பட்டாசு வெடிக்க தடை விதிக்க வலியுறுத்தி டி.ஜி.பி.,க்கு மனு அனுப்பினேன். நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு குறிப்பிட்டார்.

நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், ஏ.டி.மரியா கிளீட் அமர்வு பிறப்பித்த உத்தரவு:

அறநிலையத்துறை அதிகாரிகள் போலீசாருடன் ஒருங்கிணைந்து விதிகள், பாரம்பரிய நடைமுறைகளை பின்பற்றி திருவிழாவை அமைதியான முறையில் நடத்துவதை உறுதி செய்ய வேண்டும். வழக்கு பைசல் செய்யப்படுகிறது.

இவ்வாறு உத்தரவிட்டது.

Advertisement