தமிழகத்திலிருந்து 237 வெளிநாட்டினர் வெளியேற்றம் உயர்நீதிமன்றத்தில் தகவல்
மதுரை: விசா காலாவதியான பிறகும் சட்டவிரோதமாக இந்தியாவில் தங்கியுள்ள வெளிநாட்டினரை வெளியேற்ற தாக்கலான வழக்கில், '2022 முதல் 2025 மேமாதம் வரை 237 வெளிநாட்டினர் வெளியேற்றப்பட்டனர்,' என தமிழக அரசு தரப்பில் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. மத்திய அரசு தரப்பு பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் அளிக்கப்பட்டது.
மதுரை ரமேஷ் தாக்கல் செய்த பொதுநல மனு:
ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் சுற்றுலா தலத்தில் ஏப்.22ல் 26 பேரை பாகிஸ்தான் பயங்கரவாதிகள் சுட்டுக் கொன்றனர்.
பாகிஸ்தானை சேர்ந்தவர்களுக்கு சுற்றுலா, மருத்துவம் உள்ளிட்டவைகளுக்கான விசாவை ரத்து செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுத்தது.
விசா காலக்கெடு முடிந்தும் பாகிஸ்தானை சேர்ந்தவர்கள் இந்தியாவின் பல பகுதிகளில் வசிக்கின்றனர்.46 ஆயிரம் வெளிநாட்டினர் விசா காலாவதியான பிறகும் சட்டவிரோதமாக தங்கியுள்ளனர். வெளியேற்ற மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.
நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், ஏ.டி.மரியா கிளீட் அமர்வு விசாரித்தது.
தமிழக அரசு தரப்பு தாக்கல் செய்த பதில் மனு: தமிழகத்திற்கு 2022 முதல் 2025 மே 25 வரை பல்வேறு வெளிநாடுகளிலிருந்து 30 லட்சத்து 20 ஆயிரத்து 586 பேர் வந்துள்ளனர்.
விசா காலம் முடிந்தும் பாகிஸ்தானை சேர்ந்தவர்கள் தமிழகத்தில் தங்கியுள்ளதாக மனுதாரர் கூறுவது தவறு.
16 பேருக்கு நீண்டகால விசா வழங்கப்பட்டுள்ளது. 24 பேர் விசா நீட்டிப்புக் கோரி விண்ணப்பித்துள்ளனர்.
இந்தியாவில் 46 ஆயிரம் வெளிநாட்டினர், அதில் 20 ஆயிரம் பேர் தமிழகத்தில் சட்டவிரோதமாக தங்கியுள்ளதாக கூறுவது தவறு.
2011 முதல் 2025 மே 25 வரை 17 ஆயிரத்து 770 பேர் காலவரம்பை மீறி தங்கி இருந்தனர். அவர்களில் பலர் தமிழகத்திற்கு வந்தபின் வேறு மாநிலங்களுக்கு சென்றுவிட்டனர்.காலவரம்பை மீறி தங்கியதாக 2022 முதல் 2025 மே25 வரை வெளிநாட்டினர் 188 பேர் மீது 66 வழக்குகள், இதர குற்றங்கள் தொடர்பாக வெளிநாட்டினர் 280 பேர் மீது 65 வழக்குகள் பதியப்பட்டது.
போதைப் பொருள் கடத்தியதாக ஆப்பிரிக்காவை சேர்ந்த 31 பேர் மீது 14 வழக்குகள் பதியப்பட்டது. இலங்கை, வங்கதேசம், நைஜீரியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளை சேர்ந்த 237 பேர் 2022 முதல் 2025 மே 25 வரை வெளியேற்றப்பட்டுள்ளனர்.
வெளிநாட்டினர் பதிவு அலுவலகம், குடியேற்றத்துறை, உள்துறையுடன் ஒருங்கிணைந்து வெளிநாட்டினரை கண்காணிக்கிறோம். சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டால் இந்தியாவிலிருந்து வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
இவ்வாறு குறிப்பிட்டுள்ளது.
மத்திய அரசு தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் கோரியதால் விசாரணையை நீதிபதிகள் 3 வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.
மேலும்
-
மேட்டூர் அணை நீர்மட்டம் ஒரே நாளில் 2 அடி உயர்வு; நீர்வரத்து 73 ஆயிரம் கன அடி!
-
கவர்னரை கடவுளாக பார்க்கிறேன்; பெண் ஆட்டோ டிரைவர் நெகிழ்ச்சி
-
புரி ஜெகந்நாதர் கோவிலில் கூட்ட நெரிசல்; 600க்கும் மேற்பட்டோர் படுகாயம்
-
'சிந்தடிக்' போதை பயன்படுத்துவோர் அதிகரிப்பு; இளைஞர்களின் மனநலம் பாதிக்கும்!
-
இரட்டை இலை சின்ன விவகாரத்தில் தேர்தல் ஆணையம் எப்போது உத்தரவு பிறப்பிக்கும்: உயர்நீதிமன்றம் கேள்வி
-
பா.ஜ., அமைச்சர், நியமன எம்.எல்.ஏ.,க்கள் ராஜினாமா; புதுச்சேரி அரசியலில் பரபரப்பு