மதுரை மாநகராட்சி அதிகாரிகளிடம் குற்றப்பிரிவு போலீஸ் விசாரணை வரிகுறைப்பு முறைகேடு வழக்கு தீவிரம்: இதுவரை 8 பேர் கைது

மதுரை: மதுரை மாநகராட்சியில் தனியார் கட்டடங்கள், புதிய வீடுகளுக்கு விதிமீறி குறைவாக வரிவிதித்து ரூ.பல கோடி முறைகேடு நடந்த விவகாரம் தொடர்பாக மூன்றாவது நாளாக மாநகராட்சி அதிகாரிகளிடம் குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர். இதுவரை 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இம்மாநகராட்சியில் மண்டல அலுவலகங்களில் 2024ல் ஆயிரக்கணக்கான தனியார் கட்டடங்களுக்கு விதிமீறி வரிக்குறைப்பு செய்ததாக புகார் எழுந்தது. விசாரணையில் ரூ.பல கோடி முறைகேடு நடந்துள்ளது உறுதி செய்யப்பட்டது. மதுரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதிகாரிகளிடம் கிடுக்கிப்பிடி



அதிக அளவில் முறைகேடு நடந்தது குறித்து மாநகராட்சி மண்டல 3 (மத்தி) அலுவலகத்தில் விசாரணையை துவக்கிய போலீசார், அங்கிருந்த கம்ப்யூட்டர் உள்ளிட்ட உபகரணங்களை கைப்பற்றி நடத்திய விசாரணையில் கம்ப்யூட்டர் ஆப்பரேட்டர், புரோக்கர்கள் உட்பட 5 பேரை முதற்கட்டமாக கைது செய்தனர்.

கைதானவர்களிடம் பெற்ற வாக்குமூலம் அடிப்படையில் பெண் மண்டலத் தலைவர், அவரது கணவரிடம் நேற்றுமுன்தினம் 2 மணிநேரத்திற்கும் மேல் விசாரணை நடந்தது. நேற்று மூன்றாம் நாள் விசாரணையில் மாநகராட்சி உதவி கமிஷனர், உதவி வருவாய் அலுவலர், கம்ப்யூட்டர் ஆப்பரேட்டர்களிடம் மத்திய குற்றப்பிரிவு உதவி கமிஷனர் வினோதினி விசாரணை நடத்தினார்.

ஏ.ஆர்.ஓ., உட்பட மேலும் மூவர் கைது



இந்நிலையில் இப்புகார் தொடர்பாக மாநகராட்சி மண்டலம் 3 அலுவலகம் உதவி கமிஷனர் (பொறுப்பு) ரங்கராஜன் (ஓய்வு), உதவி வருவாய் அலுவலர் செந்தில்குமரன், புரோக்கர் முகமதுநுார் ஆகியோர் நேற்றிரவு கைது செய்யப்பட்டனர். இப்புகாரில் இதுவரை மொத்தம் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ரங்கராஜன், முறைகேடு நடந்த காலத்தில் மண்டலம் 3 அலுவலகத்தில் நிர்வாக அலுவலராக பணியில் இருந்து, உதவி கமிஷனர் பணியிடத்தை கூடுதலாக கவனித்தார். அவர் மீது ஏற்கனவே வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த புகாரில், லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நிலுவையில் இருந்தது. இதனால் கடந்தாண்டு அவர் பணி ஓய்வு பெறும் நிலையில் அதற்கு அனுமதி மறுத்து பணி முடக்கம் நடவடிக்கை அவர் மீது மேற்கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது.

போலீஸ் தரப்பில் கூறுகையில் 'விசாரணையில் சம்பந்தப்பட்டோர் ஜாக்கிரதையாக முறைகேடுகளை அரங்கேற்றியது தெரியவந்துள்ளது. பெரும்பாலும் தற்காலிக பணியாளர்களை பயன்படுத்தியுள்ளனர். ஒரே மாதிரி முறைகேடுகளே 4 மண்டலங்களிலும் நடந்துள்ளது. கவுன்சிலர்கள் - மாநகராட்சி அலுவலர்கள் இணைந்து பல வார்டுகளில் இந்த முறைகேடுகளை செய்துள்ளனர். மேலும் பல அதிகாரிகளிடம் விசாரணை நடத்துவோம்'என்றனர்.

வெளிப்படையான விசாரணை



இம்முறைகேடு குறித்து மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது:

2022 - 2023, 2023 - 2024 ஆண்டில் சில கட்டடங்களுக்கு சொத்து வரி குறைத்து மதிப்பீடு செய்து முறைகேடு நடந்துள்ளது.

இதுகுறித்து நிர்வாகத்தின் கவனத்திற்கு வந்த பின் தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டு முறைகேட்டில் ஈடுபட்டோர் மீது நடவடிக்கை எடுக்க போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

விசாரணை வெளிப்படை தன்மையுடன் நடக்கிறது. வரிவிதிப்பு முறைகேடு மதிப்பீடு தொகை தன்னிச்சையாக குறிப்பிடப்படுகிறது. அவற்றை தவிர்க்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement