மாநகராட்சி முறைகேடு55 பேருக்கு தொடர்பு போலீஸ் விசாரணையில் அதிர்ச்சி

மதுரை: மதுரை மாநகராட்சியில் ரூ.பல கோடி வரிகுறைப்பு முறைகேட்டில்

அதிகாரிகள் முதல் புரோக்கர்கள் வரை 55 பேருக்கு தொடர்பு உள்ளதாக போலீஸ் விசாரணையில் தகவல் வெளியாகி உள்ளது.

இப்புகார் தொடர்பாக மத்திய குற்றப் பிரிவு போலீசார் இதுவரை நடத்திய விசாரணையில் ஒப்பந்த பணியாளர்கள், புரோக்கர்கள், வருவாய் பிரிவினர் என பலருக்கும் தொடர்பு இருந்து 8 பேர் கைது செய்யப்பட்டனர்.

போலீசார் கூறியதாவது:

இதுவரை கைதானவர்களிடம் விசாரித்தபோது ஆரம்பத்தில் தங்களுக்குத் தெரியாமல் 'பாஸ்வேர்டு' திருடப்பட்டிருக்கலாம் என தெரிவித்தனர். ஒரு கட்டத்தில் விசாரணை 'ஸ்டைலை' போலீசார் மாற்றியவுடன் அவர்களே அனைத்து விபரங்களையும் கொட்ட ஆரம்பித்தனர்.

யார் யார் சொத்துவரியைக் குறைப்பதற்காக இயக்கினார்கள், எந்த முறையில் அதை குறைத்தனர் என்ற விவரங்களை தெளிவாக விவரித்தனர்.

அதாவது சொத்துவரி ஆப்ஷனில், நீதிமன்றத் தீர்ப்பு, கவுன்சில் கூட்டம் தீர்மானம் என்ற இரண்டு காரணங்களை பதிவேற்றம் செய்து குறைத்துள்ளனர்.

இந்த அடிப்படையில் நான்கு மண்டலங்களிலும் இந்த முறைகேட்டில் ஈடுபட்ட பில் கலெக்டர்கள், இளநிலை உதவியாளர்கள், ஒப்பந்தப் பணியாளர்கள், அவர்களை அனுமதித்த அதிகாரிகள், இயக்கிய கவுன்சிலர்கள், மண்டல தலைவர்கள் உட்பட 55 பேருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது. அரசியல் குறுக்கீடு இல்லையென்றால் இப்பட்டியல் படி இனி விசாரணை சூடுபிடிக்கும் என்றனர்.

Advertisement