'சைபர்' அடிமையாக்கும் மர்ம கும்பல்; சென்னையில் போலி 'கால் சென்டர்'

1

சென்னை : இணையவழி குற்றங்கள் செய்வதற்காக, இளைஞர்களை, 'சைபர்' அடிமைகளாக்கும் கும்பல் குறித்து, போலீசார் விசாரித்து வருகின்றனர்.

நம் நாட்டில் இருந்து, லாவோஸ், கம்போடியா, மியான்மர் நாடுகளுக்கு வாலிபர்கள் கடத்தப்படுகின்றனர்.

ஆன்லைன்

அங்கு அவர்களை பட்டினி போட்டு, 'ஆன்லைன்' வாயிலாக பண மோசடி செய்யும் சைபர் அடிமையாக்கி வருகின்றனர்; இதுகுறித்து, சி.பி.சி.ஐ.டி., போலீசார் விசாரித்து வருகின்றனர்.

இந்நிலையில், தமிழகத்திலும் அதுபோன்று சைபர் அடிமையாக்கும் மர்ம கும்பல்கள் செயல்பட்டு வருவது, சைபர் கிரைம் போலீசாருக்கு தெரியவந்துள்ளது.

கிராமங்களுக்குச் சென்று, பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்வில் தேர்ச்சி பெறாத, 20 - 35 வயதுடைய நபர்களுக்கு, அவர்கள் வலை விரிப்பதாக தெரிகிறது.

இந்நிலையில், கடந்த ஏப்., 29 முதல் ஜூன் 13 வரை, சென்னை அரும்பாக்கத்தைச் சேர்ந்த ராமநாதன், 65, என்பவருடன் பேரிய மர்ம நபர், பல்வேறு நிறுவனங்களில், 18.64 லட்சம் முதலீடு செய்தால், 4.20 கோடி ரூபாய் கிடைக்கும் என்று கூறி மோசடி செய்துள்ளார்.

இதுகுறித்து, சென்னை மேற்கு மண்டல சைபர் கிரைம் போலீசாரிடம், ராமநாதன் புகார் அளித்துள்ளார். இதையடுத்து, இக்காவல் நிலைய இன்ஸ்பெக்டர், அந்த மர்ம நபரின் மொபைல் போன் எண்ணில் தொடர்பு கொண்டார்.

அப்போது, எதிர்முனையில் பேசிய பெண், தன் பெயர் நந்தினி என்றும், மேற்கு தாம்பரம் மருத்துவமனை அருகே உள்ள, எச்.டி.எப்.சி., வங்கியில் இருந்து பேசுவதாகவும் தெரிவித்துள்ளார்.

குண்டர் சட்டம்

'நீங்கள், 2018ம் ஆண்டு எடுத்த காப்பீடு பாலிசியின் முதிர்வு தொகை, 2.85 லட்சம் ஆயிரம் ரூபாய் காலாவதியாகி விட்டது. நான் ஒரு, 'லிங்க்' அனுப்புகிறேன். அதில் வங்கி கணக்கு எண், ஆதார் கார்டு உள்ளிட்ட விபரங்களை பதிவு செய்யுங்கள்' என, கூறியுள்ளார்.

அவர் எங்கிருந்து பேசுகிறார் என்பதை போலீசார் விசாரித்த போது, தேனாம்பேட்டை ரங்கூன் தெருவில், ஜெ.வி.எல்.பிளாசா என்ற கட்டடத்தில், ஐந்தாவது மாடியில் இருந்து பேசுவதை கண்டறிந்தனர்.

போலீசார் அங்கு சென்று பார்த்த போது, 50 பேருடன் போலி கால் சென்டர் செயல்படுவது தெரியவந்தது. 50 பேரும் சைபர் அடிமையாக்கப்பட்ட நபர்களா என்பது குறித்து விசாரணை நடக்கிறது. போலி கால் சென்டர் உரிமையாளர் முனீர் உசேன், 36, நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டார்.

இவர் இதேபோல போலி கால் சென்டர் நடத்தி மோசடி செய்ததது தொடர்பாக, கடந்த 2020ல் கைது செய்யப்பட்டார். அப்போது அவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

Advertisement