முதனை கிராம விவசாயிகளுக்கு தோட்டக்கலைத் துறை முகாம்

விருத்தாசலம் : விருத்தாசலம் அடுத்த முதனை கிராமத்தில் தோட்டக்கலைத்துறை சார்பில் உழவரைத் தேடி வேளாண் திட்ட சிறப்பு முகாம் நடந்தது.

கம்மாபுரம் வட்டார தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் அலெக்ஸ் தலைமை தாங்கினார். அதில், முந்திரி பயிர் சாகுபடியில் கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள் மற்றும் உயர் தொழில் நுட்பங்கள் குறித்து எடுத்து கூறப்பட்டது.

புதிய நடவு மேற்கொள்ளும் விவசாயிகள் விதைக்கன்றுகளை தவிர்க்கவும், விளைச்சல் அதிகம் தரக்கூடிய ஒட்டுரக செடிகளை நடவு செய்யவும் அறிவுறுத்தப்பட்டது. மேலும், இடை உழவு, பயறு வகை ஊடுபயிர்கள் சாகுபடி, பசுந்தாள் உரப்பயிர்கள் நடவு செய்தல், மானியத்தில் சொட்டுநீர் பாசனம் அமைத்து நீர் பாய்ச்சுதல், உரமிடும் முறைகள் குறித்தும் விளக்கம் அளிக்கப்பட்டது.

உதவி வேளாண் அலுவலர் கலைச்செல்வி, துணை தோட்டக்கலை அலுவலர் விசுவநாதன் ஆகியோர் குறுவை சாகுபடி தொகுப்பு, நெல் இயந்திர நடவு மானிய திட்டங்கள், விவசாயிகள் விவரங்கள் மின்னணு பதிவேற்றம் குறித்து பேசினர்.

உதவி தோட்டக்கலை அலுவலர்கள் ஏழுமலை, நாகராஜன் உட்பட விவசாயிகள் பலர் பங்கேற்றனர்.

Advertisement