பருத்திக்கு உரிய விலை கிடைக்க தமிழக அரசு நடவடிக்கை

2

சென்னை : 'தமிழகத்தில் பருத்திக்கு உரிய விலை பெற, விவசாயிகள் பருத்தியை தரம் பிரித்து, ஒழுங்கு முறை விற்பனை கூடங்களுக்கு கொண்டு வந்து விற்கலாம்' என, தமிழக அரசு அறிவித்துள்ளது.

அதன் அறிக்கை:



தமிழகத்தில், 2024 - 25ம் ஆண்டில், 2.55 லட்சம் ஏக்கரில் பருத்தி சாகுபடி செய்யப்பட்டு, 36,000 டன் பஞ்சு உற்பத்தியானது.


நடப்பாண்டு, 4.40 லட்சம் ஏக்கரில், பருத்தி சாகுபடி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தற்போது டெல்டா மாவட்டங்களில் உள்ள, 17 ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில், 14,115 விவசாயிகள் மற்றும் 26 வர்த்தகர்கள், பருத்தி பரிவர்த்தனை செய்திட பதிவு செய்துள்ளனர். இதுவரை, 9 கோடி ரூபாய் மதிப்பிலான, 1,511 டன் பருத்தி பரிவர்த்தனை செய்யப்பட்டுள்ளது.



பருத்தியின் தரத்திற்கு ஏற்ப, ஒரு குவிண்டாலுக்கு அதிகபட்ச விலையாக, 7,700; குறைந்தபட்ச விலையாக 4,111; சராசரி விலையாக 5,850 ரூபாய் என்ற அளவில், பரிவர்த்தனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தமிழகம் முழுதும் இதுவரை 1,976 டன் பருத்தி பரிவர்த்தனை செய்யப்பட்டுள்ளது. பருத்தியின் தரத்திற்கேற்ப விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.


தேசிய பருத்தி வாரியமும், தமிழகத்தில் பருத்தி கொள்முதல் செய்ய வலியுறுத்தப்பட்டு உள்ளது. விவசாயிகள் பருத்தியில் லாபகரமான விலை பெற, பருத்தியை உலர்த்தி, தரம் பிரித்து, அருகில் உள்ள ஒழுங்கு முறை விற்பனை கூடங்களுக்கு கொண்டு செல்லவும்.


வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை மாநில அலுவலர்கள், டெல்டா மாவட்டங்களுக்கு நேரடியாக சென்று கள ஆய்வு நடத்தி, பருத்திக்கு லாபகரமான விலை கிடைக்க செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. பருத்தி விவசாயிகளுக்கு உரிய விலை கிடைத்திட, தமிழக அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement