தீபாவளி சீட்டு நடத்துவதாக ரூ.15.52 லட்சம் மோசடி அரசு பஸ் மெக்கானிக் கைது

தேனி: தேனி மாவட்டம், ஆண்டிபட்டியில் தீபாவளி சீட்டு நடத்துவதாக கூறி ரூ.15.52 லட்சம் மோசடி செய்த, உசிலம்பட்டி அரசு போக்குவரத்து கழக பணிமனை மெக்கானிக் முருகனை 57, போலீசார் நேற்று கைது செய்தனர்.

ஆண்டிபட்டி ராசு நாயக்கர் தெரு சுப்பிரமணி 59. இசைக்கருவி வாசிப்பவர். இவரது வீட்டிற்கு 2018ல் ஆண்டிபட்டி சுப்பாநாயுடு சந்து ஓடைத் தெருவை சேர்ந்த, உசிலம்பட்டி அரசு போக்குவரத்து பணிமனை மெக்கானிக் முருகன், அவரது மனைவி தீபா சென்றனர். தீபாவளி சீட்டு நடத்தி வருவதாகவும், ஓராண்டுக்கு ரூ.1 லட்சத்து 4 ஆயிரம் பணம் செலுத்தினால், லாபத் தொகை ரூ.31 ஆயிரம் சேர்த்து ரூ.1.35 லட்சம் தருவதாக கூறினர். இதனை நம்பி சுப்பிரமணி உட்பட குடும்பத்தினர் 9 பேர் இணைந்துரூ.18.52 லட்சம் செலுத்தினர். ஆனால் சீட்டு முடிந்ததும் பணம் வழங்காமல் முருகன் காலம் கடத்தினார்.

2023 செப்.2ல் ரூ.18.52 லட்சம் சீட்டுத் தொகைக்கு கடன் பத்திரம் எழுதி 3 மாதங்களுக்கு ஒரு முறைரூ.1 லட்சம் தருவதாக தெரிவித்து முருகன், மனைவி தீபா கையெழுத்திட்டு வழங்கினர். அதன்படி ரூ.3 லட்சம் மட்டும் திருப்பிக் கொடுத்தனர். மீதம் உள்ள ரூ.15.52 லட்சம் வழங்கவில்லை. தேனி எஸ்.பி., அலுவலகத்தில் சுப்பிரமணி செய்த புகாரின் பேரில் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் முருகன், தீபா மீது மோசடி வழக்குப் பதிந்து முருகனை கைது செய்தனர்.

Advertisement