வங்கியாளரை ஏமாற்றி திருமணம்; பெண்ணிடம் போலீஸ் விசாரணை

நாமக்கல் : நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு, பெரியமணலி அடுத்த குளத்துக்காட்டை சேர்ந்தவர் நவீன்குமார், 29.
இவர், நாமக்கல் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் அளித்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது:
நாமக்கல் அடுத்த வரகூராம்பட்டியில் உள்ள கனரா வங்கியில், உதவி மேலாளராக பணிபுரிகிறேன். நாமக்கல் -- சேலம் சாலையில் உள்ள திருமண தகவல் மையம் மூலம், நாமக்கல் ராமாபுரம் புதுாரை சேர்ந்த ரவீந்திரன் மகள் தன்வர்த்தினி, 29, அறிமுகமானார்.
அப்போது, தன்வர்த்தினி, பொள்ளாச்சி ஆர்.டி.ஓ.,வாக பணியாற்றி வருவதாக அவரும், அவரது தந்தையும் தெரிவித்தனர். இதையடுத்து, 2024 ஜூன், 12ல் எங்கள் இருவருக்கும் திருமணம் நடந்தது. விசாரித்தபோது, தன்வர்த்தினி பொள்ளாச்சி ஆர்.டி.ஓ.,வாக இல்லை என்பது தெரிந்தது.
இதுதொடர்பாக, தன்வர்த்தினி மற்றும் அவரது பெற்றோரிடம் விசாரித்தபோது, தன்வர்த்தினி டி.என்.பி.எஸ்.சி., குருப் - 1 தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளதாக தலைமை செயலர் கையொப்பமிட்ட ஒரு அடையாள அட்டையை காண்பித்தனர். விசாரித்ததில் அது போலிஎன்பது தெரிந்தது. எனவே, தன்வர்த்தினி மீதும், அவரது பெற்றோர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறியிருந்தார்
மாவட்ட குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் சவீதா, மோசடி வழக்குப்பதிவு செய்து, நேற்று முன்தினம், தன்வர்த்தினியை கைது செய்து விசாரிக்கின்றனர்.