தலைவாசல் கால்நடை பூங்கா தனியார்மயமாவதற்கு எதிர்ப்பு
தலைவாசல்: 'சேலம் மாவட்டம் தலைவாசல் கால்நடை பூங்காவில் உள்ள வணிக கட்டடங்களை, தனியாருக்கு வாடகைக்கு விடுவதாக வெளியான அறிவிப்பை திரும்ப பெற வேண்டும்' என, தமிழக அரசுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.
ஐக்கிய விவசாயிகள் சங்கத்தலைவர் சங்கரய்யா கூறியதாவது:
தலைவாசல், வி.கூட்ரோட்டில், 1,100 ஏக்கரில், 1,022 கோடி ரூபாயில், கால்நடை விலங்கின அறிவியலுக்கான ஒருங்கிணைந்த உயர் ஆராய்ச்சி நிலையம், அ.தி.மு.க., ஆட்சியில் கட்டப்பட்டது.
அங்கு ஆராய்ச்சி நிலையம், கால்நடை மருத்துவ கல்லுாரி செயல்படுகிறது.கடந்த, 25ல், கால்நடை ஆராய்ச்சி நிலைய வளாகத்தில் உள்ள வணிக கட்டடங்களை, மாத வாடகைக்கு விட, 'டெண்டர்' அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இந்த கால்நடை பூங்கா வளாகத்தில் நிறுவ வேண்டிய நன்னீர் மீன் வளர்ப்பு திட்டம், ஆவின் பல்பொருள் உற்பத்தி திட்டம் ஆகியவற்றுக்கு நிதி ஒதுக்கீடு செய்த பிறகும், அதற்கான பணிகள் தொடங்கப்படவில்லை.
அதனால், 'டெண்டர்' அறிவிப்பை, தமிழக அரசு திரும்ப பெற்று, இத்திட்டங்களுக்கு பணியாளர்களை நியமனம் செய்து, திட்டங்களை அரசு ஏற்று செயல்படுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.