நில வழிகாட்டி மதிப்பு உயர்வை திரும்ப பெற எதிர்க்கட்சி தலைவர் சிவா வலியுறுத்தல்

புதுச்சேரி : நில வழிகாட்டி மதிப்பு உயர்வை திரும்ப பெறாவிட்டால் கல்வீடு கட்ட மானியம் வழங்கும் திட்டம் முடங்கிவிடும் என, எதிர்க்கட்சி தலைவர் சிவா எச்சரித்துள்ளார்.

அவரது அறிக்கை:

புதுச்சேரியில் 40 சதவீத மக்கள் சொந்த வீடுகள் இல்லாமல் உள்ளனர். நில வழிகாட்டி மதிப்பு உயர்த்தப்பட்டதன் மூலம் வீடு கட்டும் மானியம் வழங்கும் திட்டமே கேள்விக்குறியாகியுள்ளது. முத்திரைத் தாள் கட்டணம் கட்டி மனை வாங்கிய பின், டெவலப்மென்ட் சார்ஜ் தனியாக கட்ட வேண்டிய நிலை உள்ளது.

அங்கீகரிக்கப்படாத மனைகளில் இடம் வாங்கினாலும் வீடு கட்டுவதற்கு அரசு மானியம் தருவதில்லை. இதுபோன்ற பல்வேறு சிக்கல்களால் ஏழை, நடுத்தர மக்களின் சொந்த வீடு கனவு கானல் நீராகியுள்ளது.

பொதுவாகவே மனைகள் அரசின் வழிகாட்டி மதிப்பைவிட கூடுதல் விலைக்குத்தான் விற்கப்பட்டு வருகிறது. அரசே வழிகாட்டி மதிப்பை மனையின் விலையை விட பல மடங்கு உயர்த்தி விட்டதால் உரிமையாளர்களும், மனையின் விலையை உயர்த்தி விற்பர்.

ஏழைகள் பயன் பெற கூடாது என்பதற்காக திட்டமிட்டு நில வழிகாட்டி மதிப்பை உயர்த்தியுள்ளதாக தெரிகிறது. நில வழிகாட்டி மதிப்பு உயர்வை முதல்வர் ரங்கசாமி திரும்ப பெற வேண்டும்.

இல்லையெனில், தேர்தலின்போது நில வழிகாட்டி மதிப்பை உயர்த்தியவர்களுக்கும், ஆதரவு கொடுப்பவர்களுக்கும் மக்கள் தக்க பாடம் புகட்டுவர்.

இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Advertisement