10 மாதமாக கிடப்பில் போடப்பட்ட மண்டகப்படி மண்டபம் பணி சீரமைப்பு

திருவாலங்காடு:திருத்தணி முருகன் கோவிலின் உபகோவிலான வடாரண்யேஸ்வரர் திருக்கோவில் திருவாலங்காடில் அமைந்துள்ளது. இந்த கோவிலின் தேர் மண்டபம் அருகே, மண்டகப்படி மண்டபம் அமைந்துள்ளது.
இந்த மண்டகப்படி மண்டபம் என்பது அபிஷேக மண்டபம் எனக் கூறப்படுகிறது. பங்குனி உத்திரத்தின் போது, உற்சவர் வடாரண்யேஸ்வரர் கமலத்தேரில் வீதியுலா வந்து, பின் இந்த மண்டபத்தில் அபிஷேகம் செய்யப்பட்டு மீண்டும் கோவிலுக்குள் செல்வார்.
இத்தகைய சிறப்பு வாய்ந்த மண்டபம், 30 ஆண்டுகளாக பராமரிப்பின்றி பாழடைந்து உள்ளது.
இதை சீரமைக்க வேண்டும் என, பலமுறை கோவில் நிர்வாகத்துக்கு உபயதாரர்கள், பக்தர்கள் வாயிலாக கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால், நடவடிக்கை எடுக்கவில்லை
இதுகுறித்து நம் நாளிதழில் கடந்தாண்டு அக்., 18ல் செய்தி வெளியானது. பின், பாழடைந்த மண்டபத்தை சூழ்ந்து வளர்ந்த செடிகள் அகற்றப்பட்டு, மண்டபத்தை சீரமைக்க கற்கள் வரிசைபடி எண் போடப்பட்டது.
பின், 10 மாதமாக சீரமைக்கும் பணி கிடப்பில் போடப்பட்டுள்ளது.
இதனால், பக்தர்கள் வேதனை அடைந்துள்ளனர். எனவே, சீரமைப்பு பணியை விரைந்து முடிக்க, திருத்தணி கோவில் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பக்தர்கள் வலியுறுத்தியுள்ளனர்.