டி.ஆர்.எஸ்., குளோபல் பள்ளியில் ரத்ததான முகாம்

திருத்தணி:டி.ஆர்.எஸ்., குளோபல் பள்ளியில் நடந்த ரத்ததான முகாமில், 40க்கும் மேற்பட்டோர் பங்கேற்று ரத்ததானம் வழங்கினர்.
திருத்தணி அடுத்த அகூர் நத்தம் பகுதியில் செயல்பட்டு வரும் டி.ஆர்.எஸ்., குளோபல் பள்ளியில், திருத்தணி மற்றும் அரக்கோணம் ரோட்டரி சங்கம், வேலுார் நாராயணி மருத்துவமனை ஆகியவற்றின் சார்பில் ரத்ததான முகாம், கிருஷ்ணா கல்வி குழுமத்தின் தலைவர் டி.ஆர்.சுப்பிரமணியம் தலைமையில் நேற்று நடந்தது.
கல்வி குழுமத்தின் செயலர் டி.எஸ்.ரவிக்குமார் முன்னிலை வகித்தார். பள்ளி முதல்வர் நித்யகல்யாணி வரவேற்றார். இதில், திருத்தணி டி.எஸ்.பி., கந்தன் பங்கேற்று, ரத்ததான முகாமை துவக்கி வைத்தார்.
பள்ளி ஆசிரியர்கள், பெற்றோர் மற்றும் சமூக ஆர்வலர்கள் என, மொத்தம் 40க்கும் மேற்பட்டோர் பங்கேற்று ரத்ததானம் வழங்கினர். ரத்ததானம் செய்தவர்களுக்கு பாராட்டு சான்று வழங்கப்பட்டது.
முகாமில், ரோட்டரி சங்க தலைவர்கள் மனோகர்பிரபு, லட்சுமிபதி, திருத்தணி ரோட்டரி சங்க முன்னாள் தலைவர் ராசிராஜேந்திரன் உட்பட பலர் பங்கேற்றனர். முடிவில், கல்வி குழுமத்தின் மக்கள் தொடர்பு அலுவலர் சீனிவாசன் நன்றி கூறினார்.