கனிமொழி, கீதா ஜீவன் வீட்டுக்கு மிரட்டல் விடுத்தவர் சிக்கினார்
துாத்துக்குடி:துாத்துக்குடி, குறிஞ்சிநகரில் உள்ள கனிமொழி எம்.பி., மற்றும் போல்பேட்டையில் உள்ள அமைச்சர் கீதா ஜீவன் வீடுகளில் வெடிகுண்டு இருப்பதாக சென்னையில் உள்ள 108 ஆம்புலன்ஸ் கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று முன்தினம் வந்த தொலைபேசி அழைப்பில் பேசியவர் கூறினார்.
இருவரது வீடுகளிலும் வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார் சோதனை நடத்தினர். அது வெறும் புரளி என, தெரியவந்தது. போலீசார் நடத்திய விசாரணையில், மிரட்டல் விடுத்தவர், துாத்துக்குடி, கிருஷ்ணராஜபுரத்தை சேர்ந்த மாரியப்பன், 58, என தெரியவந்தது. மாற்றுத்திறனாளியான அவரிடம், வடபாகம் போலீசார் நேற்று விசாரித்தனர்.
அவரது மகள், ஓராண்டுக்கு முன் ஒருவருடன் சென்றது தொடர்பாக, காவல் நிலையத்தில் புகார் அளித்தபோது, போலீசார் விசாரிக்க வராத ஆத்திரத்தில், தொலைபேசியில் மிரட்டல் விடுத்ததாக அவர் கூறினார். மன உளைச்சலில் இருந்த மாரியப்பனை, 'இனிமேல் இதுபோன்ற செயல்பாடுகளில் ஈடுபடக் கூடாது' என, போலீசார் எச்சரித்து அனுப்பினர்.