பால் பண்ணைக்கு 'சீல்' உரிமையாளர் தற்கொலை

மதுரை:மதுரை மாவட்டம், மேலுார் ஏ.மலம்பட்டியைச் சேர்ந்தவர் ராஜபாண்டி, 52. மகனுடன் சேர்ந்து வீட்டருகே, 'வசந்தம் டைரி மில்க்' என்ற பெயரில் பால்பண்ணையை எட்டு ஆண்டுகளாக நடத்தி வந்தார்.

தொழில் வளர்ச்சிக்காக, மூன்று ஆண்டுகளுக்கு முன் தனியார் வங்கியில், 3 கோடி ரூபாய் கடன் வாங்கினார். மாதம், 3 லட்சம் ரூபாய் தவணை செலுத்தி வந்தார். ஏழு மாதங்களாக தவணை செலுத்தாததால் ஐந்து நாட்களுக்கு முன் வங்கி, 'நோட்டீஸ்' அனுப்பியது.

அதில், 'ஜூன் 27ல் பணத்தை திருப்பி செலுத்தவில்லை என்றால் பால்பண்ணைக்கு சீல் வைக்கப்படும்' என எச்சரிக்கப்பட்டிருந்தது. ராஜபாண்டி மன உளைச்சலுக்கு ஆளானார். பணத்திற்கு ஏற்பாடு செய்வதற்காக அவரது மகன் ஜெர்வின்பால் நேற்று முன்தினம் வெளியே சென்ற நிலையில், மதியம் பால்பண்ணைக்கு சீல் வைக்கப்பட்டது. விரக்தியடைந்த ராஜபாண்டி, மதுரை மாட்டுத்தாவணி பஸ் ஸ்டாண்ட் வந்தார்.

இதை அறியாத ஜெர்வின்பால், இரவு 7:00 மணிக்கு தந்தையின் மொபைல் போனில் தொடர்பு கொண்டபோது, 'பயணியர் அமரும் இடத்தில் உங்கள் அப்பா விஷம் குடித்து இறந்து கிடக்கிறார்' என, ஒருவர் தெரிவித்தார்.

மாட்டுத்தாவணி போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement