'பா.ஜ., -அ.தி.மு.க., கூட்டணி 101 சதவீதம் வெற்றி பெறும்'

4

சேலம்: ''தமிழகத்தில், ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தவே, பா.ஜ.,வுடன், அ.தி.மு.க., கூட்டணி அமைத்துள்ளது,'' என, த.மா.கா., தலைவர் வாசன் கூறினார்.


காங்கிரஸ் மூத்த தலைவரான, மறைந்த எம்.பி.சுப்ரமணியம் நுாற்றாண்டு விழா, சேலத்தில் நடந்தது. அவரது படத்துக்கு மரியாதை செலுத்திய, த.மா.கா., தலைவர் வாசன் அளித்த பேட்டி:



ஆந்திராவில், 'மா'விற்கு கிலோ 12 ரூபாய் விலை நிர்ணயித்து, அம்மாநில அரசு, 4 ரூபாய் மானியம் வழங்குவதுபோல, தமிழக அரசும் வழங்க வேண்டும். டி.என்.பி.எஸ்.சி., குரூப் 1 தேர்வில், தி.மு.க., பற்றி கேள்வி இடம்பெற்றது அநாகரிகத்தின் உச்சம்.


தமிழகத்தில், ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தவே, பா.ஜ., - அ.தி.மு.க., கூட்டணி அமைந்துள்ளது. தோல்வி பயத்தால், ஆட்சியாளர்கள் குழப்பம் ஏற்படுத்த பார்க்கின்றனர். ஆனால், தேசிய ஜனநாயக கூட்டணி வலுவாக உள்ளது. ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு கூட்டணி ஆட்சி என்ற எண்ணம் மேலோங்கி, அது பற்றி பேசப்படுகிறது.


மக்கள் விரோத தி.மு.க., அரசை அகற்றுவதே ஒரே நோக்கம் என்பதால், தேசிய ஜனநாயக கூட்டணி, 100 சதவீதம் வெற்றி பெறும். தி.மு.க., ஆட்சியை அகற்ற விரும்பும் கட்சிகள் இணைந்தால், இந்த வெற்றி, 101 சதவீதமாக மாறும். நான்கு ஆண்டு தி.மு.க., ஆட்சியில், சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்து விட்டது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement