கொலையான கேரள நபர் உடல் தமிழக வனப்பகுதியில் மீட்பு

பந்தலுார்:கேரள மாநிலம், பூமலை பகுதியை சேர்ந்த சுபிஷா, கோழிக்கோடு மெடிக்கல் காலேஜ் போலீஸ் ஸ்டேஷனில், 2024 மார்ச் 20ம் தேதி முதல், தன் கணவர் ஹேமச்சந்திரன், 53, என்பவரை காணவில்லை என, 2024 ஏப்., 1ம் தேதி புகார் அளித்தார். விசாரணையில் ஒரு கும்பல் கடத்தி சென்றது தெரியவந்தது.

கோழிக்கோடு உதவி காவல் ஆணையர் உமேஷ் தலைமையிலான போலீசார், சம்பவத்தில் தொடர்புடைய சுல்தான் பத்தேரியை சேர்ந்த அஜீஸ், ஜோதிஷ்குமார் ஆகியோரை கைது செய்து விசாரித்தனர். இதில், பணம் கொடுக்காததால் நவ்ஷாத் மற்றும் கைது செய்யப்பட்ட இருவரும் சேர்ந்து, ஹேமச்சந்திரனை கடத்தி கொலை செய்து, தமிழகத்தில், பந்தலுார் அருகே காபிக்காடு என்ற இடத்தில் சாலையை ஒட்டிய வனத்தில் சதுப்பு நிலத்தில் உடலை புதைத்தது தெரியவந்தது.

நேற்று காலை கேரள போலீசார், கூடலுார் ஆர்.டி.ஓ., குணசேகரன், தேவாலா டி.எஸ்.பி., ஜெயபாலன் தலைமையிலான குழுவினர் ஹேமச்சந்திரன் உடலை மீட்டு, ஊட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இவ்வழக்கில் தொடர்புடைய நவ்ஷாத் வெளிநாட்டில் இருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. கொலை செய்யப்பட்ட கேரள நபரின் உடலலை தமிழக வனப்பகுதியில் புதைத்த சம்பவம் பந்தலுாரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement