கள்ளக்குறிச்சியில் 'ரிங் ரோடு' அமைக்க ரூ.73 கோடி ஒதுக்கீடு : அமைச்சர் தகவல்

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் 'ரிங் ரோடு' அமைக்க 14 கி.மீ., தொலைவிற்கு, நிலங்களை எடுப்பதற்காக ரூ.73 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் வேலு தெரிவித்துள்ளார்.

கள்ளக்குறிச்சியில் நடந்த ரூ.46.30 கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்ட பணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழாவில் அவர் பேசியதாவது:

புறநகர் பஸ்நிலையம் அமைக்க வேண்டும் என்ற மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை முதல்வர் ஸ்டாலின் நிறைவேற்றியுள்ளார். ஏமப்பேர் பகுதியில் 5.5 ஏக்கர் பரப்பளவில், முதற்கட்டமாக ரூ.16.21 கோடி மதிப்பில் புறநகர் பஸ்நிலையம் அமைகிறது.

இங்கு, 50க்கும் மேற்பட்ட பஸ்களை நிறுத்தும் வகையில், 70க்கும் மேற்பட்ட கடைகள், பாதுகாக்கப்பட்ட குடிநீர், கழிவறை உள்ளிட்ட வசதிகளுடன் பஸ்நிலையம் அமையும்.

முதல்வர் ஸ்டாலின் வரும், 2030ம் ஆண்டுக்குள் தமிழகத்தின் பொருளாதாரம் ஒரு டிரில்லியன் டாலரை தாண்ட வேண்டும் என கருதுகிறார்.

பொருளாதார வளர்ச்சி என்பது தனிமனிதன் கடன் பெறாமல் தனது பொருளாதாரத்தை வளர செய்து, குடும்ப சேமிப்பை அதிகப்படுத்துவதாகும். அரசின் பல்வேறு துறைகள் சார்பாக கட்டமைப்பு உருவாக்கும் போது நாட்டின் பொருளாதாரம் வளர்ச்சி பெறும்.

கள்ளக்குறிச்சியில் 'ரிங் ரோடு' அமைக்க எம்.எல்.ஏ.,க்கள் உட்பட பலரும் கோரிக்கை வைத்துள்ளனர். வீரசோழபுரத்தில் இருந்து சங்கராபுரம், கச்சிராயபாளையம் சாலைகளை இணைக்கும் வகையில் 14 கி.மீ., சாலை நிலங்களை எடுப்பதற்காக ரூ.73 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

தேசிய நெடுஞ்சாலையில் இருந்து புதிதாக அமைய உள்ள புறநகர் பஸ்நிலையத்திற்கு வருவதற்காக 2.30 கி.மீ., தொலைவில் தனியார் நிலத்தை கையகப்படுத்தி, சாலை அமைக்க வேண்டியுள்ளது. இதில் நில எடுப்புக்கு ரூ.56.71 கோடியும், சாலை அமைக்க ரூ.30 கோடி நிதியும் ஒதுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அமைச்சர் வேலு பேசினார்.

Advertisement