லிப்ட் கொடுத்து மூதாட்டியிடம் செயின் பறித்த வாலிபர் கைது

திருச்சி : முசிறி அருகே, பைக்கில் லிப்ட் கொடுத்து, மூதாட்டியிடம், செயினை பறித்துச் சென்ற வாலிபரை, போலீசார் கைது செய்தனர்.

திருச்சி மாவட்டம், முசிறி அருகே, மாணிக்கபுரத்தை சேர்ந்த செல்வராஜ் மனைவி கல்யாணி, 66. ஜூன் 25ல், திருச்சியில் வசிக்கும் மூத்த மகள் வீட்டில் இருந்து மாணிக்கபுரத்திற்கு வந்த கல்யாணி, அந்த வழியாக ஹெல்மெட் அணிந்து பைக்கில் வந்த வாலிபரிடம் லிப்ட் கேட்டுள்ளார்.

மூதாட்டியை பைக்கில் அழைத்து சென்ற வாலிபர், மாணிக்கபுரம் அருகே, பைக்கை நிறுத்தி கல்யாணி கழுத்தில் அணிந்திருந்த, ஐந்து சவரன் செயினை பறித்துக் கொண்டு தப்பினார்.

புகாரில், தா.பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து, மாணிக்கபுரம் பகுதியில் பொருத்தி இருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை வைத்து, விசாரித்தனர்.

விசாரணையில், திருச்சி மாவட்டம், தெற்கு திருப்பஞ்சலியைச் சேர்ந்த ராஜா, 31, என்பவர், செயின் பறித்து சென்றது தெரிந்தது.

இதையடுத்து, போலீசார் ராஜாவை கைது செய்து செயினையும், பைக்கையும் பறிமுதல் செய்தனர்.

Advertisement