மருத்துவ பூச்சியியல் ஆய்வு மையம்  ஆராய்ச்சியாளர்களை அதிகரிக்க வழக்கு உயர்நீதிமன்றம் தள்ளுபடி

மதுரை: மதுரை மருத்துவ பூச்சியியல் ஆராய்ச்சி மையத்திற்கு போதிய நிதி ஒதுக்கீடு செய்து ஆராய்ச்சியாளர் பணியிடங்களை அதிகரிக்க தாக்கலான வழக்கை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தள்ளுபடி செய்தது.

மதுரை ரமேஷ் தாக்கல் செய்த பொதுநல மனு:இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் கீழ் (ஐ.சி.எம்.ஆர்.,) மதுரை சின்ன சொக்கிகுளத்தில் மருத்துவ பூச்சியியல் ஆராய்ச்சி மையம் (சி.ஆர்.எம்.இ.,) செயல்படுகிறது. டெங்கு, சிக்குன்குனியா ஏற்பட காரணங்கள், அதை கட்டுப்படுத்துவதற்கான ஆலோசனைகளை வழங்கியது. சி.ஆர்.எம்.இ.,யை புதுச்சேரியிலுள்ள கொசுக்களால் ஏற்படும் நோய் தொடர்புடைய ஆராய்ச்சி மையத்தின் கட்டுப்பாட்டிற்கு மாற்ற இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் இயக்குனர் ஜெனரல் உத்தரவிட்டார். இதை ரத்து செய்ய வேண்டும். மதுரை மருத்துவ பூச்சியியல் ஆராய்ச்சி மையத்தில் ஆராய்ச்சியாளர் பணியிடங்களை அதிகரிக்க வேண்டும். போதிய நிதி ஒதுக்கீடு செய்து, அம்மையத்தின் ஆராய்ச்சி பணியை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு குறிப்பிட்டார்.

நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், ஏ.டி.மரியா கிளீட் அமர்வு பிறப்பித்த உத்தரவு: மனுதாரர் தவறுதலாக புரிந்து கொண்டு மனு தாக்கல் செய்துள்ளார். பணியிடங்களை உருவாக்குவது உள்ளிட்ட அரசின் நிர்வாக ரீதியான முடிவுகளில் நீதிமன்றம் தலையிட முடியாது. மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. இவ்வாறு உத்தரவிட்டனர்.

Advertisement