சென்னை-பாங்காக் விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு; பயணிகள் 146 பேர் அவதி

3


சென்னை: சென்னையில் இருந்து இன்று (ஜூன் 29) தாய்லாந்து புறப்பட இருந்த விமானத்தில் திடீரென தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதனால் விமானம் ரத்து செய்யப்பட்டது.


சென்னை விமான நிலையத்தில் இருந்து தாய்லாந்து தலைநகர் பாங்காக் நோக்கி 146 பயணிகளுடன், தாய் ஏர்வேஸ் நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் புறப்பட தயாரானது. இதையடுத்து விமானத்தில் திடீரென தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. கடைசி நேரத்தில், விமானி பிரச்னையை கண்டறிந்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

தற்போது விமானத்தில் தொழில்நுட்ப கோளாறை சரி செய்யும் பணி நடந்து வருகிறது. பயணிகள் அனைவரும் ஹோட்டலில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இன்று விமானம் ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் கடும் அவதி அடைந்தனர். விமானம் இன்று இரவு அல்லது நாளை காலை தாய்லாந்திற்கு புறப்படும் என தாய் ஏர்வேஸ் விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.




இது குறித்து பயணி ஒருவர் கூறியதாவது: நான் வேலை விஷயமாக தாய்லாந்திற்கு செல்ல திட்டமிட்டு இருந்தேன். தற்போது திடீரனெ விமானம் ரத்து செய்யப்பட்டதால், கடும் சிரமம் ஏற்பட்டுள்ளது. இதனால் எனது நேரம் வீணாகி உள்ளது. இதனால் எனது வேலைகள் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளது, என்றார்.

Advertisement