ஒடிசா கூட்ட நெரிசல் சம்பவம் : கலெக்டர், எஸ்.பி., டிரான்ஸ்பர்

2

புவனேஸ்வர்: புரி ஜெகந்நாதர் கோவில் ரத யாத்திரையில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 3 பக்தர்கள் உயிரிழந்ததை தொடர்ந்து, மாவட்ட கலெக்டர் மற்றும் எஸ்.பி., இருவரையும் டிரான்ஸ்பர் அளித்து ஒடிசா அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.


ஒடிசாவில் உலகப் புகழ்பெற்ற புரி ஜெகந்நாதர் கோவில் ரத யாத்திரை நேற்று முன்தினம் (ஜூன் 27) கோலாகமாக துவங்கியது. புரி ஜெகந்நாதர் வருடாந்திர ரத உற்சவம் ஜூலை 5ம் தேதி வரை நடக்க உள்ளது.


3வது நாளான இன்று (ஜூன் 29) அதிகாலை 4:30 மணியளவில் ஸ்ரீ கண்டிச்சா கோவிலுக்கு முன்பாக ஏராளமான பக்தர்கள் தரிசனத்திற்காக கூடி இருந்தனர். அப்போது திடீரென கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இந்த நெரிசலில் சிக்கி, மூச்சு திணறல் ஏற்பட்டு 3 பேர் உயிரிழந்தனர்.



இதனை தொடர்ந்து ஒடிசா முதல்வர் மோகன் மஜி, புரி மாவட்ட கலெக்டர் சித்தார்த் சங்கர் ஸ்வைன் மற்றும் எஸ்.பி., வினீத் அகர்வால் ஆகியோரை பணியிடமாற்றம் செய்து உத்தரவிட்டார்.



இது தொடர்பாக முதல்வர் மோகன் மஜி பதிவிட்டுள்ளதாவது:

துரதிர்ஷ்டவசமான சம்பவம் நிகழ்ந்தது. இந்த சம்பவம் குறித்து விசாரிக்க உயர்மட்ட விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்கப்படும்.


இந்தியாவின் மிக முக்கியமான திருத்தலங்களில் ஒன்றான புரி ஜெகந்நாதர் கோவிலில், திருவிழா நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிகின்றனர். இதனால் அடிக்கடி பாதுகாப்பு பிரச்சினைகள் எழுகின்றன. வரும் திருவிழாக்களில் இதுபோன்ற சம்பவங்கள் நிகழாமல் இருக்க கூட்டம் கட்டுப்பாட்டுக்கான கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.


புரி மாவட்ட கலெக்டர், எஸ்.பி., பணியிடமாற்றம் செய்யப்பட்டனர். மேலும் இரண்டு போலீஸ் அதிகாரிகள், தங்கள் பணியில் அலட்சியமாக இருந்ததை குற்றம்சாட்டி சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.



நானும் எனது அரசும் அனைத்து ஜெகந்நாதர் பக்தர்களிடமும் மன்னிப்பு கோருகிறோம். சாரதாபலியில் உயிரிழந்த பக்தர்களின் குடும்பங்களுக்கு எங்கள் இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம், மேலும் இந்த ஆழ்ந்த துக்கத்தைத் தாங்கும் வலிமையை அவர்களுக்கு வழங்க வேண்டும் என்று மகாபிரபு ஜெகந்நாதரிடம் பிரார்த்திக்கிறோம்.

இவ்வாறு மோகன் மஜி பதிவிட்டுள்ளார்.

Advertisement