வங்கதேசம் துர்கா கோவில் இடிப்பு ஹிந்துக்கள் போராட்டம்

டாக்கா: நம் அண்டை நாடான வங்கதேசத்தில் முஸ்லிம்களே பெரும்பான்மையாக வசிக்கின்றனர்.

கடந்தாண்டு மாணவர் போராட்டங்களை தொடர்ந்து, முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால நிர்வாகம் அமைந்தது. அப்போது, ஹிந்துக்கள் மீதான தாக்குதல் அதிகரித்தது.

இந்நிலையில், தலைநகர் டாக்காவில் கில்கெட் பகுதியில், ரயில்வேயின் இடத்தை ஆக்கிரமித்து கட்டியுள்ளதாக, துர்கா கோவில் புல்டோசர்களால் இடித்து தள்ளப்பட்டது. எவ்வித அவகாசமும் கொடுக்காமல், கோவிலில் உள்ள கடவுள் சிலை மற்றும் பிற பொருட்களை அகற்றாமல் இடித்து தள்ளினர்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஹிந்து அமைப்புகள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டன.

டாக்காவில் துர்கா கோவில் இடிக்கப்பட்டதற்கு, நம் வெளியுறவு அமைச்சகம் கண்டனத்தை பதிவு செய்துள்ளது. 'ஹிந்துக்களின் சொத்துக்கள் மற்றும் வழிபாட்டு தலங்களை பாதுகாப்பது வங்கதேச இடைக்கால அரசின் பொறுப்பு' என, நம் வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் சுட்டிக்காட்டியுள்ளார்.

'சிறுபான்மையினர் உரிமைகளை பாதுகாக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படுகின்றன. அதே நேரத்தில் பொது இடத்தை ஆக்கிரமிப்பதை ஏற்க முடியாது' என, வங்கதேச வெளியுறவுத்துறை வெளியிட்ட அறிக்கை கூறுகிறது.

Advertisement