கருணாநிதியால் கூட முடியவில்லை; ஸ்டாலினின் பகல் கனவு பலிக்காது என்கிறார் இ.பி.எஸ்.,

10

கள்ளக்குறிச்சி: "எம்.ஜி.ஆர்., மற்றும் ஜெயலலிதா ஆட்சியின் போது, அ.தி.மு.க.,வை அழிக்க நினைத்த கருணாநிதியின் அனைத்து முயற்சிகளும் முறியடிக்கப்பட்டது. ஸ்டாலினின் பகல் கனவு ஒருபோதும் பலிக்காது," என்று அ.தி.மு.க., பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., தெரிவித்துள்ளார்.



உளுந்தூர்பேட்டையில் நடந்த அ.தி.மு.க., பாகக் கிளை நிர்வாகிகளின் கூட்டத்தில் பங்கேற்ற போது அவர் பேசியதாவது; ஸ்டாலின் பகல் கனவு கொண்டிருக்கிறார். எதிர்வரும் 2026 சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க., பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியமைக்கும். நமக்கு பலமான கூட்டணி அமையும். நிர்வாகிகள் கவலைப்பட தேவையில்லை.


முதற்கட்டமாக பா.ஜ.,வுடன் கூட்டணி அமைத்துள்ளோம். நமது கூட்டணியை பார்த்து முதல்வர் ஸ்டாலின் சட்டசபையில் பதறுகிறார். அவருக்கு பயம் வந்துவிட்டது. கூட்டணி வைக்கும் நோக்கமே, ஓட்டுகள் சிதறாமல் நமது வேட்பாளர் ஜெயிக்க வேண்டும். தி.மு.க., எனும் தீயசக்தி, மக்கள் விரோத அரசை அகற்ற கூட்டணி வைத்துள்ளோம்.


இன்று எதிர்க்கட்சி வரிசையில் இருப்பவர்கள் பேசுகிறார்கள், "இ.பி.எஸ்., பா.ஜ.,வுடன் கூட்டணி வைத்து விட்டார்," என்று கூறுகிறார்கள். பா.ஜ., அ.தி.மு.க.,வை கபளிகரம் செய்து விடும் என்று சொல்கிறார்கள். அ.தி.மு.க., பொன் விழா கண்ட கட்சி. தமிழகத்தில் 31 ஆண்டுகள் ஆண்ட கட்சி. எந்த கொம்பனாலும் ஏதும் செய்ய முடியாது.


எம்.ஜி.ஆர்., இருந்த காலத்திலேயே அ.தி.மு.க.,வை அழிக்க கருணாநிதி பல முயற்சி செய்தார். அத்தனையும் தூள் தூளாக உடைத்தவர் எம்.ஜி.ஆர்.,. அவரது மறைவுக்குப் பிறகு, கருணாநிதி அ.தி.மு.க.,வை அழிக்க முயற்சித்தார். அத்தனை முயற்சிகளையும் ஜெயலலிதா முறியடித்தார். கருணாநிதியாலேயே முடியலை. ஸ்டாலினின் கனவு ஒருபோதும் பலிக்காது. ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அ.தி.மு.க.,வை உடைக்க ஸ்டாலின் எவ்வளவோ முயற்சிகள் செய்தார். சில துரோகிகள், எட்டப்பர்கள் தி.மு.க.,வோடு சேர்ந்து ஜெயலலிதா ஆட்சியை கவிழ்க்க நினைத்தார்கள். ஆனால், மக்களின் ஆதரவால், அ.தி.மு.க., ஆட்சி தொடர்ந்தது.


இதனை பொறுக்க முடியாமல் ஸ்டாலின் சட்டையை கிழித்துக் கொண்டு வெளியே போனார். அ.தி.மு.க.,வை ஒருபோதும் வீழ்த்த முடியாது. அ.தி.மு.க.,வின் தலைமை பொறுப்பேற்ற இ.பி.எஸ்., 10 தேர்தல்களில் தோல்வியடைந்ததாக ஸ்டாலின் சொல்லுவார். 2011 முதல் 2021 வரையில் எத்தனை தேர்தல்களில் நீங்கள் தோல்வியடைந்தீர்கள் என்பதை எண்ணிப் பாருங்கள். 2011ல் எதிர்க்கட்சி வரிசையில் கூட அமர முடியாத கட்சி தி.மு.க.,. எங்களை விமர்சிக்க எள் அளவு கூட தகுதியில்லை. 2021 தேர்தலில் 525 அறிவிப்புகளை வெளியிட்டீங்க. அதில், எத்தனையை நிறைவேற்றி உள்ளீர்கள். அத்தனையும் பொய்யான வாக்குறுதி. மக்களை ஏமாற்றி, கொல்லைப் புறம் வழியாக தி.மு.க., ஆட்சிக்கு வந்தது.


தி.மு.க., ஆட்சிக்கு வந்த பிறகு விலைவாசி உயர்வு, மின்கட்டண உயர்வு, வீட்டுவரி உயர்வு, குடிநீர் வரி உயர்வு என வரி மேல் வரி போட்டு மக்களை வாட்டி வதைக்கிறது. பெண்கள், மக்களை ஏமாற்றி வருகிறார் ஸ்டாலின்.


ஸ்டாலின் ஆட்சியில் கொலை, கொள்ளை, வழிப்பறி, பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட குற்றங்கள் நடக்காத நாட்களே இல்லை. போதைப்பொருட்கள் தாராளமாக கிடைக்கிறது. ஒரு கேவலமான ஆட்சி இது. பொம்மை முதல்வராக இருக்கும் போது இந்த குற்றங்களை எப்படி கட்டுப்படுத்த முடியும், இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement