காலிறுதிக்கு முன்னேறியது செல்சி: கிளப் உலக கால்பந்தில்

சார்லோட்டி: கிளப் உலக கோப்பை கால்பந்து காலிறுதிக்கு செல்சி அணி முன்னேறியது.

அமெரிக்காவில், உலகின் முன்னணி கால்பந்து கிளப் அணிகள் பங்கேற்கும் 'பிபா' உலக கோப்பை 21வது சீசன் நடக்கிறது. சார்லோட்டியில் நடந்த 'ரவுண்டு-16' போட்டியில் செல்சி (இங்கிலாந்து), பென்பிகா (போர்ச்சுகல்) அணிகள் மோதின. முதல் பாதி கோல் எதுவுமின்றி சமநிலையில் இருந்தது. இரண்டாவது பாதியில் எழுச்சி கண்ட செல்சி அணிக்கு 64வது நிமிடத்தில் ரீஸ் ஜேம்ஸ் ஒரு கோல் அடித்தார். நான்கு நிமிடம் மீதமிருந்த நிலையில் இடி, மின்னல் காரணமாக போட்டி 2 மணி நேரம் நிறுத்தப்பட்டது.
இரண்டாவது பாதியின் 'ஸ்டாப்பேஜ்' நேரத்தில் (90+5வது நிமிடம்) பென்பிகா அணிக்கு கிடைத்த 'பெனால்டி' வாய்ப்பில் ஏஞ்சல் டி மரியா ஒரு கோல் அடித்தார். ஆட்டநேர முடிவில் போட்டி 1-1 என சமநிலையில் இருந்தது. இரு அணிகளுக்கும் தலா 15 நிமிடம் கூடுதல் நேரம் வழங்கப்பட்டது. இதில் அசத்திய செல்சி அணிக்கு கிறிஸ்டோபர் நுங்குன்கு (108வது நிமிடம்), பெட்ரோ நெட்டோ (114வது), டியூஸ்பரி-ஹால் (117வது) தலா ஒரு கோல் அடித்தனர். கூடுதல் நேர முடிவில் செல்சி அணி 4-1 என்ற கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்குள் நுழைந்தது.


பிலாடெல்பியாவில் நடந்த மற்றொரு 'ரவுண்டு-16' போட்டியில் பிரேசிலின் பால்மெய்ராஸ் அணி 1-0 என போடாபோகோ அணியை (பிரேசில்) வீழ்த்தியது. காலிறுதியில் (ஜூலை 4) பால்மெய்ராஸ், செல்சி அணிகள் மோதுகின்றன.

Advertisement