குடும்பத்தை குலைத்தவர்; நெறிமுறை மீறி டிஸ்மிஸ் ஆனவர்: மஹ்வா மொய்த்ரா மீது சக திரிணாமுல் எம்.பி., விமர்சனம்!

3


@block_B@ கோல்கட்டா: மேற்கு வங்கத்தில் சட்டக்கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் இடையே மோதல் எழுந்துள்ளது. இது முதல்வர் மம்தா பானர்ஜிக்கு பெரும் தலைவலியை உண்டாக்கியுள்ளது. block_B

கோல்கட்டாவில், தெற்கு கோல்கட்டா சட்டக் கல்லூரியில் படித்த 24 வயதான மாணவி கடந்த ஜூன் 25ம் தேதி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இச்சம்பவம் தொடர்பாக அக்கல்லூரி முன்னாள் மாணவரும், ஆளும் திரிணமுல் காங்., மாணவர் பிரிவு நிர்வாகியுமான மோனோஜித் மிஸ்ரா, ஜைப் அகமது, பிரமித் முகர்ஜி ஆகியோர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

இதனிடையே இச்சம்பவம் தொடர்பாக சட்டக்கல்லூரியின் காவலாளி ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர். இதன் மூலம் கைது எண்ணிக்கை 4 ஆக அதிகரித்துள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக கருத்து தெரிவித்த ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் எம்.பி., செராம்பூர் எம்.பி., கல்யாண் பானர்ஜி "நண்பன் ஒருவனே மாணவியை பாலியல் பலாத்காரம் செய்தால், எப்படி, அந்தப் பெண்ணை பாதுகாக்க முடியும். பள்ளிகளில் போலீஸ் இருக்குமா?," என்று கேட்டிருந்தார். அதேபோல, அதே கட்சியின் எம்.எல்.ஏ., மதன் மித்ராவும், "இந்த சம்பவம் பெண்களுக்கு ஒரு பாடம். கல்லூரி மூடியிருக்கும் போது யாராவது உங்களை அழைத்தால், போகாதீர்கள். அந்தப் பெண் அங்கு செல்லாவிட்டால், இந்த சம்பவம் நடந்திருக்காது" என்று அவர் கூறினார். அவர்களின் இந்தப் பேச்சு பெரும் சர்ச்சையை கிளப்பியது.

இதையடுத்து, அந்த இரு தலைவர்களின் கருத்துக்கும், கட்சிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைமை தெரிவித்துள்ளது. மேலும், இந்த சம்பவத்தைக் கண்டிப்பதாகவும் கூறியது.

இந்த நிலையில், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் இந்தப் பதிவுக்கு அக்கட்சியின் எம்.பி., மஹ்வா மொய்த்ரா பதிலளித்து கருத்து பதிவிட்டிருந்தார். அதில்,
"சட்டக்கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை தொடர்பாக திரிணாமுல் எம்.பி., மற்றும் எம்.எல்.ஏ.,வின் கருத்துக்கள் அருவருப்பானவை. இதுபோன்ற கருத்துகளை கண்டிப்பதில் திரிணாமுல் மற்ற கட்சிகளிலிருந்து வேறுபடுகிறது," என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்தக் கருத்தால் கடுப்பான எம்.பி., கல்யாண் பானர்ஜி, எம்.பி., மஹ்வா மொய்த்ராவின் திருமணம் குறித்து பேசியிருப்பது மேலும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. பிஜூ ஜனதா தளம் முன்னாள் எம்.பி., பினாகி மிஸ்ராவை மொய்த்ரா திருமணம் செய்ததை குறிப்பிட்டு பேசிய கருத்துக்கள் எதிர்ப்பை கிளப்பியுள்ளது.

அவர் கூறியதாவது; மஹ்வா மொய்த்ரா தனது ஹனிமூனை முடித்துக்கொண்டு இந்தியாவுக்கு திரும்பியுள்ளார். இந்தியாவுக்கு திரும்பிய உடனே என்னுடன் சண்டையை தொடங்கி விட்டார். நான் பெண்களுக்கு எதிரானவன் என்று அவர் கூறுகிறார். அவர் ஒரு குடும்பத்தை சீர்குலைத்து விட்டு, 65 வயது ஆணுடன் திருமணம் செய்து கொண்டுள்ளார்.
நான் பெண்களின் எதிரி என்று அவர் கூறுகிறார். அவர் தனது தொகுதியின் அனைத்து பெண் தலைவர்களுக்கும் எதிராக உள்ளார். யாரும் வேலை செய்ய அவர் அனுமதிப்பதில்லை" என்று கூறினார். மேலும், நெறிமுறை மீறலுக்காக பார்லியில் இருந்து வெளியேற்றப்பட்ட ஒரு எம்.பி., எனக்கு அறிவுரை சொல்கிறார் என்றும் விமர்சித்திருந்தார்.

மேற்கு வங்கத்தில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், சட்டக்கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் மம்தா தலைமையிலான அரசுக்கு பெருத்த சிக்கலை உண்டாக்கியுள்ளது. இப்படியிருக்கையில் கட்சியின் மூத்த தலைவர்கள் மோதிக் கொள்வது அக்கட்சிக்கு மேலும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement