சுற்றுலாப் பயணிகள் கூமாப்பட்டிக்கு வர வேண்டாம்; இணையத்தில் ட்ரெண்டிங் செய்த இளைஞர் அந்தர் பல்டி!

10

விருதுநகர்: அணை மூடப்பட்டு இருப்பதால், சுற்றுலாப்பயணிகள் இங்கு வந்து ஏமாந்துபோவது வேதனையாக இருக்கிறது. சுற்றுலா பயணிகள் யாரும் வர வேண்டாம் என கூமாப்பட்டியை ட்ரெண்டாக்கிய இளைஞர் தங்கபாண்டி தெரிவித்துள்ளார்.



விருதுநகர் மாவட்டத்தில் வத்திராயிருப்பு என்ற ஊருக்கு அருகில் மேற்குத் தொடர்ச்சி மலை அடி வாரத்தில்தான் கூமாப்பட்டி கிராமம் அமைந்துள்ளது. கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பாக, 'இன்ஸ்டாகிராம்' சமூக வலைதளத்தில் கூமாப்பட்டி என்ற பெயர் டிரெண்டிங்கில் இருந்தது.
அந்த கிராமத்தை சேர்ந்த இளைஞர் தங்கப்பாண்டி என்பவர், அணையில் குளித்தபடி, இயற்கை சூழலையும் காட்டியபடி தனது பாணியில் பேசியவாறு வீடியோ ஒன்றை வெளியிட, அது வைரலானது.


பள்ளி படிக்கும் குழந்தைகள் மனதில் கூட கூமாப்பட்டி ஆழமாக பதிந்தது. அந்த கிராமத்திற்கு படையெடுக்க துவங்கினர். பலர், கூமாப்பட்டி குறித்து வீடியோ வெளியிட்டனர்.
மாவட்ட நிர்வாகமே கூமாப்பட்டிக்கு ஒதுக்கிய நிதி குறித்து விளக்கம் அளித்து இருந்தது. இங்கு சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி இல்லை பொதுப்பணித்துறை அதிகாரிகள் திட்டவட்டமாக கூறியிருந்தனர்.

யாரும் வராதீர்கள்





இந்த சூழலில் கூமாப்பட்டியை இணையத்தில் ட்ரெண்டாக்கிய இளைஞர் தங்கப்பாண்டி அளித்த பேட்டி: தற்போது பொதுப்பணி மற்றும் வனத்துறை அதிகாரிகள் மூடிவிட்டார்கள். அதனால் இப்போது தற்காலிகமாக சுற்றுலாப் பயணிகள் யாரும் வர வேண்டாம். தற்போது மூடிவிட்டார்கள். அவர்கள் பாவம் எங்கேயோ இருந்து, எனது வீடியோவை பார்த்து வருகிறார்கள். அவர்கள் ஏமாந்து செல்வது எனக்கு மன வேதனையாக இருக்கிறது.


மனசாட்சி குத்துகிறது


என்னை நம்பி இங்கு வந்து ஒரு சுற்றுலாப் பயணிகள் ஏமாந்து செல்வது எனது மனது கேட்கவில்லை. எனது மனசாட்சி குத்துகிறது. நேற்று வரைக்கும் திறந்திருந்தது. ஐந்து வருடமாக முடங்கி இருந்த பிறகு திறந்திருந்தது. தற்போது மூடிவிட்டார்கள்.


கஷ்டமாக இருக்கிறது


இதனால் சுற்றுலாப் பயணிகள் தற்காலிகமாக யாரும் வர வேண்டாம். அது எனக்கு ரொம்ப கஷ்டமாக இருக்கிறது. இங்கு வந்து அவர்கள் ஏமாற்றம் அடைவது எனக்கு ஒரு மன வருத்தமாக இருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார். வீடியோ மூலம் இணையத்தில் ட்ரெண்டாக்கிய இளைஞரை தற்போது கூமாப்பட்டிக்கு வர வேண்டாம் எனக் கூறியிருப்பது அவரது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது என நெட்டிசன்கள் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.

Advertisement